கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த நாயை சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிபுரா அருகே உள்ள ஹோசகொப்பல் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்துள்ளது.
இந்தச் சிறுத்தை அந்தப் பகுதியில் செம்மறி ஆடுகள், நாய்களை தூக்கிச் சென்று கொன்றுள்ளது. இதுதொடர்பாக அந்த கிராம மக்கள் வனத்துறையிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஹோச கொப்பல் கிராமத்தை சேர்ந்த தேவகவுடா என்பவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்.
அந்த நாய் நேற்று இரவு வீட்டு வளாகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை, அவரது வீட்டு வளாகத்துக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த நாயை தூக்கி சென்றது.
குடியிருப்புப் பகுதிக்குள் வந்த சிறுத்தை, வீட்டுக்குள் புகுந்து நாயை தூக்கிச் சென்ற காட்சிகள் தேவகவுடா வீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும், பொதுமக்கள், குழந்தைகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.