வங்கிகள் பரிவர்த்தனைக்கு வருகிற 26-ம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA-ன் கீழ், ஜூலை 1, 2017 அன்று முதல் அனைத்து நபர்களும், தங்களின் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேலும் சில நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் அரசிதழில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் படி, ஒரு நிதியாண்டில் ரூ. 20 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்ய அல்லது வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கவும், வங்கியில் நடப்புக் கணக்கைத் தொடங்கவும் நிரந்தர கணக்கு எண் (பான்) அல்லது பயோமெட்ரிக் ஆதாரைக் காட்டுவது கட்டாயம் என அறிவித்துள்ளது.
வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வருமான வரி முதன்மை இயக்குநர் ஜெனரல் அல்லது வருமான வரி இயக்குநர் ஜெனரல் நிரந்தர கணக்கு எண் அல்லது ஆதார் எண் அங்கீகாரத்துக்கான நடைமுறைகளுடன் தரநிலைகளை வகுக்க வேண்டும்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையுடன் தொடர்புடைய அனைத்து தகவல் தொடர்புகளிலும் மற்றும் குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போதும் பான் கார்டு அல்லது அதன் நகல் கையில் இல்லாதபட்சத்தில் வாடிக்கையாளர்கள் பான் எண்ணையாவது கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
மேலும் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகிய அனைத்திலுமே 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்ய ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கும் ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயமாகும். அதேபோல் நடப்பு கணக்கு (Current Account) தொடங்கவோ, ரொக்க கடன் கணக்கு (Cash credit account) தொடங்கவோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் வரும் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்வதற்கு பான் எண் கட்டாயம் என்கிற நடைமுறை தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.