மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.
ஓமந்தூரார் தோட்டத்தில் கடந்த 28-ந் தேதி துணை ஜனாதிபதியால் திறக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கும் மலர்தூவி வணங்கினார்.
கருணாநிதியின் சிலையை வடிவமைத்த மீஞ்சூரை சேர்ந்த சிற்பி தீனதயாளனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் வேடம் அணிந்து 25 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், மேயர் பிரியா, மண்டல குழு தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று மரியாதை செலுத்தினார்கள்.அவருடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அந்த பகுதியில் நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பிறகு கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.
கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் ஏழைகளுக்கு அறுசுவை உணவு.வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.

