
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்விக் கண் திறந்த கர்ம வீரர், வேளாண் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய குறிக்கோளை செயல்படுத்திய வேளாண்மை நாயகர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமைகளை போற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்கிய பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய தியாகங்களையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.




