
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டம் தர்ஹால் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களில் தமிழக வீரரும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.அவர், மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த லஷ்மணன் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜௌரியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் இருவர் நடத்திய தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பர்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்குள் இரண்டு பேர் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இறந்த தமிழக வீரர் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ20லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று அதிகாலை காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன். வீரமரணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.