நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (01-09-2022) முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நள்ளிரவு முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், இதுவரை கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.310-ல் இருந்து ரூ.355-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 28 சுங்கச்சாவடிகள் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தபட்டுள்ளது.





