முன்னாள் பிரதமரும், சிறந்த தேசபக்தருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் ( 25.12.22) கொண்டாடப்படுகிறது. மக்களின் இதயங்களை வென்ற அந்த மகத்தான தலைவனின் பிறந்த நாள் நல்லாட்சி தினமாகவும் மத்திய அரசினால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;
“பாரதிய ஜனதா கட்சி என்ற உலகின் மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்த பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.
நல்லாட்சி நாயகனாக நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கையும் வென்றெடுத்த நம் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் இந்திய அரசின் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கிய திட்டங்கள், துணிச்சலாய் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள், எந்தச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்காத நேர்மை,: உரைக்கும் சொல் அனைத்தும் உண்மை, சத்தியம். தொடர் சாதனைகளை சாமான்யமாக செய்து காட்டியவர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.
மிகச் சிறந்த கவிஞராக, ஆற்றல் மிக்க பேச்சாளராக, அனுபவம் மிக்க பத்திரிகையாளராக, நாட்டுப்பற்று மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக, பாரதம் போற்றும் பிரதமராக திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தேசத்திற்கான பங்களிப்பை அவர் பிறந்த நன்னாளில் பெருமையுடன் நினைந்து வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்” என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.