திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 1ம்தேதி புத்தாண்டு மற்றும் 2ம்தேதி முதல் 11ம்தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் என 2.20 லட்சம் டிக்கெட்கள் நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியானது. இதனுடன் ரூ300 சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டும் வெளியிடப்பட்டது. இதுதவிர திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான 10 நாட்களுக்கான இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் வரும் 1ம்தேதி முதல் வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கக்கூடிய நிலையில் முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தான இணையத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் நேற்றிரவு இதற்கு மறுப்பு தெரிவித்து திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு துறை அதிகாரி ரவி கூறியதாவது : ஏழுமலையான் கோயிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசிக்கான 11 நாட்களுக்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தேவஸ்தான இணையத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். கோவிட் நிபந்தனைகள் கடைபிடிக்க வேண்டும் என நிபந்தனைகள் வைக்கப்பட்டிருந்தது. இது தவறுதலாக இணையத்தில் வெளியாகி விட்டது. கொரோனா நிபந்தனைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் எவ்வித வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடாததால் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு வரலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.