நாமக்கல்: நாமக்கல் அருகே தாய், மனைவி, சகோதரர் என 3 பேரைக் கொன்ற விவசாயி, தனது நிலத்தை ஏழைகளுக்குக் கொடுத்து விடும்படி கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் மூலக்காடு பகுதியை சேர்ந்த நஞ்சப்ப கவுண்டர் என்பவரது மனைவி செட்டியம்மாள் (75). நஞ்சப்ப கவுண்டர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செட்டியம்மாள் தனது மகன்கள் காளியண்ணன் (55), பழனிவேல் (48) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஆறரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்தும், கறவை மாடுகளை வளர்த்தும் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களில் மனநலம் பாதிக்கப்பட்ட காளியண்ணன் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. பழனிவேலுக்கு செல்வம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் கரூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (45) என்பவரை பழனிவேல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மாட்டு தொழுவத்தில் காளியண்ணன் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் செட்டியம்மாளும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கிருஷ்ணவேணியும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அருகில் இருந்த தானியங்கள் சேமிக்கும் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு பழனிவேல் தூக்கில் பிணமாக தொங்கியதை அக்கம்பக்கத்தினர் கண்டனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் தேடியபோது, ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் சொத்துக்களை அனாதை இல்லங்களுக்கு கொடுக்கவும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடிதத்தில் உள்ள மற்ற விவரங்களைத் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். இவரது தற்கொலைக்கான காரணமும் உடனடியாகத் தெரியவில்லை.
தாய், மனைவி, சகோதரரைக் கொன்று விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
Popular Categories



