சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24 -ஆம் தேதி நடைபெற உள்ளது. தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தேதி அறிவித்துள்ளார்.
திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமான இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் தேவஸ்தானம் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். இங்கு லிங்கம் ,மூர்த்தம் சங்கமம், ஆகிய மூன்று வடிவங்களில் சிவபெருமான் அருள் புரிந்து வருகிறார். கோவிலில் மலை மீது உமா மகேஸ்வரர், சட்டநாதர் சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலை பால் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 1991 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந் நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் ஆகியோர் முன்னிலையில் பாலாஸ்தாபனம் செய்யப்பட்டு தொடங்கியது.
கோயிலில் உள்ள சுவாமி அம்மன் சன்னதிகள், ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரம் , விமானங்கள், சட்டநாதர் மலை சன்னதி, திருஞான சம்பந்தர் சன்னதி மற்றும் உள் பிரகாரங்கள் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டது. பணிகள் மற்றும் புதிய சந்ததிகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கோவில் திருப்பணிகள் ரூபாய் பத்து கோடியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் மே மாதம் 24 ஆம் தேதி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் தேதியை தருமபுரம் ஆதீனம் அறிவித்தார். சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமாக சன்னிதானம் மே மாதம் 24 ஆம் தேதி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் 22ஆம் தேதி பரிவார சுவாமிகள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கூறினார். மேலும் சீர்காழி தமிழ் சங்கத்தையும் தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்





