
காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியின் போதும் சி.ஆர்.பி.எப் தேர்வு ஆங்கிலம், இந்தியில் தான் நடந்தது என்று மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கூறியுள்ளது.சி.ஆர்.பி.எப்.ஆள் சேர்ப்பு தேர்வுகளில் இதே விதிகள் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தன என்பதை மு.க.ஸ்டாலின் அறிவாரா?. அரசியலமைப்பு உரிமையை தட்டி பறித்ததை உணராத மு.க.ஸ்டாலின் தற்போது தமிழுக்காக, தமிழர்களுக்காக உருகுவது ஏன்? என தமிழக பா.ஜனதா துணைத் தலைவர் தி.நாராயணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் கூறி இருப்பதாவது:- சி.ஆர்.பி.எப். பணியில் ஆட் சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சி.ஆர்.பி.எப்.ஆள் சேர்ப்புக்கான கணினி தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் இது தமிழக இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிப் போர் சொந்த மாநிலத்திலேயே தாய்மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது இந்தி பேசுவோருக்கு சாதகமானதாகவும், பாகுபாடு காட்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது, துணை ராணுப்படையில் தமிழர்கள் பணியாற்றும் வாய்ப்பை பறிக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு உள்ளது. இது அரசியலமைப்பு வழங்கி உள்ள உரிமையை பாதிப்பதாகவும் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளில், குறிப்பாக 2004-2014 வரையிலான சி.ஆர்.பி.எப் ஆள் சேர்ப்புக்கான அறிவிக்கைகளை ஆராய்ந்து பார்த்த போது, தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில், (உள்துறை இணை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்தவர் இருந்த போதும்) சி.ஆர்.பி.எப்.ஆள் சேர்ப்பு தேர்வுகளில் இதே விதிகள் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தன என்பதை மு.க.ஸ்டாலின் அறிவாரா?.
அந்த பத்து வருடங்களில் நடைபெற்ற கணினி தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்ட போது தமிழக இளைஞர்கள் ஏன் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை? என்பதையும், சொந்த மாநிலத்திலேயே தாய் மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏன் ஏற்பட்டது? என்பதையும், இந்தி பேசுவோருக்கு சாதகமாக திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து கொண்டது ஏன்? என்பதையும், அன்று பாகுபாடு காட்டியது ஏன்? என்பதையும், திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தமிழர்கள் துணை ராணுவப்படையில் பணியாற்றும் வாய்ப்பை பறித்தது ஏன்? என்பதையும், அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதித்து சமவாய்ப்பை மறுத்தது ஏன்? என்பதையும் தமிழக முதலமைச்சர் விளக்க வேண்டும்.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளதால், அலுவல் மொழியான இந்தியிலோ அல்லது இணைப்பு மொழியான ஆங்கிலத்திலோ அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் என்பதாலேயே இந்த அறிவிக்கை என்பதையும் தெளிவுபட குறிப்பிட்டு உள்ளது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழக இளைஞர்கள் குறித்து கவலைப்படாத தமிழ் மொழி இல்லாதது குறித்து வருந்தாத, அரசியலமைப்பு உரிமையை தட்டி பறித்ததை உணராத மு.க.ஸ்டாலின் தற்போது தமிழுக்காக, தமிழர்க ளுக்காக உருகுவது ஏன்? அரசியல் உள்நோக்கம் தானே? காழ்ப்புணர்ச்சி தானே? இன்று கேட்பது சரி யென்றால், அன்று மத்தியில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழர்களை வஞ்சி த்தது தவறு தானே? அதற்கு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பாரா முதல்வர் ஸ்டாலின் அவர்கள்? அல்லது எதற்கெடுத்தாலும் மொழி அரசியல் செய்து மக்களை தூண்டுவதை நிறுத்திக் கொள்வாரா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.