
‘வாட்ஸாப்’ செயலியில் நமக்கு தொடர்பு பட்டியலில் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் குரல் அழைப்புகளை தவிர்க்கும் வசதியை ‘மெட்டா’ நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த வசதியைப் பெறுவதற்கு, நீங்கள் வாட்ஸாப் செயலியை ‘அப்டேட்’ செய்து கொள்ள வேண்டும்.
‘வாட்ஸாப்’ தகவல் பரிமாற்ற செயலியை உலக, முழுதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை ‘மெட்டா’ நிறுவனம் நிர்வகித்து வருகிறது. மொபைல் போன் வாயிலாக குறுஞ்செய்திகளை பரிமாறுவது போக வெளிநாட்டில் உள்ளவர்களை ‘மொபைல் போன்’ வாயிலாக அழைத்துப் பேசும் குரல் அழைப்பு வசதியையும் வாட்ஸாப் செயலி அளித்து வருகிறது. இதனை பெரும்பாலானவர்களும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வாய்ஸ் சிக்னல் சரி இல்லாத போதிலும் வாட்ஸ் அப் வாயிலான கால் சரியாக இயங்குவதால், அதையே பயன்படுத்துகின்றனர். இதனால் ஐ.எஸ்.டி., அழைப்புகளுக்கான கட்டணச் செலவு முற்றிலுமாக குறைந்துள்ளது.
எனினும், வாட்ஸ் அப் வாயிலாக சில சிரமங்களையும் பயனர்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸாப் அழைப்புகளின் எண்ணிக்கை, அவற்றில் பலவும் ஏமாற்றுப் பேர்வழிகளால் செய்யப்படுவது இவற்றால் நொந்து போயுள்ளனர்.
அண்மையில் கூட, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாட்ஸாப் பயனாளர்களுக்கு வியட்நாம், மலேஷியா, கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளின் எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக புகார் எழுந்தது. அவ்வாறு வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், அவை சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல்களிடம் இருந்து வரும் மோசடி அழைப்புகள் என்றும் மத்திய அரசு எச்சரித்தது. இந்தக் குறைபாட்டை சீர் செய்யும்படி, மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்து, சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ என்ற புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பயனாளர்களின் வாட்ஸாப் தொடர்பு பட்டியலில் இல்லாத புதிய எண்களில் இருந்து அழைப்பு வரும் போது, அவை நம், ‘மொபைல் போன்’ திரையில் தெரியாது. ‘ரிங் டோன்’ ஒலிக்காது. ஆனால், ‘நோட்டிபிகேஷன்’ பிரிவில், அழைப்பு வந்த தகவல் பதிவாகிவிடும். இதன் வாயிலாக, அழைத்த எண்ணை பயனாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
வாட்ஸாப் செயலியில் உள்ள, ‘செட்டிங்க்ஸ்’ – ‘பிரைவசி’ – ‘கால்ஸ்’ ஆகியவற்றை அடுத்தடுத்து, ‘கிளிக்’ செய்து, ‘சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ என்ற வசதியை செயல்படுத்தினால், இந்த புதிய வசதியை அனைத்து பயனாளர்களும் பெற முடியும்.