2023 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்பட உள்ளன. அவர்களுக்கு தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்து விளங்கிய சிறுகதை, கவிதை, கட்டுரைகளுக்கான இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கீழடி அகழாய்வை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட ‛ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக அதனை எழுதிய உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், திருக்கார்த்தியல் சிறுகதை ஆசிரியர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாஹித்ய அகாதெமியின் விருது பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி தமது டிவிட்டர் பதிவில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.