
திமுக., இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடந்தது. இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது…
எனக்கு 70 வயது. ஆனால் நான் 20 வயது இளைஞர் போன்ற உணர்வில் நின்று கொண்டிருக்கிறேன். உங்களை பார்க்கும்போது புத்துணர்ச்சி பெறுகிறேன். உதயநிதிக்கு கிடைத்து இருக்கும் அமைச்சர் பதவி அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். அவர் பாராளுமன்ற தேர்தலில் காட்டிய ஒற்றை செங்கலை எப்படி மறக்க முடியும்? இன்னும் அதை எண்ணி எதிர்க்கட்சிகள் புலம்புகின்றன.
நீட் தேர்வு, அதிமுக., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் உள்பட அநீதிக்கு எதிராக உதயநிதி தீவிரமாக போராடினார். கட்சிப் பணி, ஆட்சிப்பணி இரண்டையும் சிறப்பாக செய்து நல்ல பெயரை வாங்கி தருகிறார். இளைஞர் அணியினர் உதயநிதி போல் பணியாற்ற வேண்டும். நான் பிறந்த பயனை அடைந்து விட்டேன். இல்லந்தோறும் இளைஞர் அணி என்ற தீர்மானத்தை பாராட்டுகிறேன். மாணவர்கள், இளைஞர்களுக்கு நம்மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிட மாடலை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் ஐஎண்டிஐஏ கூட்டணி. இந்தப் பெயரை கேட்டாலே பிரதமருக்கு பிடிக்கவில்லை. எங்கு சென்றாலும் திமுக.,வைப் பற்றித்தான் பேசுகிறார். இந்த ஆட்சி குடும்ப ஆட்சிதான். ஒன்றியத்தில் ஆள்வதால் வெல்ல முடியாத கட்சி போல் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
அமித்ஷா நேற்று வந்தாரே புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவா வந்தார்? ஏதோ பாத யாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாத யாத்திரை அல்ல. பாவ யாத்திரை. 2002-ல் குஜராத்தில் நடந்ததற்கும், இப்போது மணிப்பூரில் நடக்கும் சம்பவத்துக்கும் மன்னிப்பு கோரும் பாவ யாத்திரை… என்று அவர் பேசினார்.
ஸ்டாலின் பாவ யாத்திரை என்று பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எண்ணற்ற பாவங்களைச் செய்துள்ள திமுக.,வும் ஸ்டாலினும் ராமேஸ்வரம் வந்து பாவ மன்னிப்பு கேட்டு, யாத்திரை நடத்துங்கள் என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த #EnMannEnMakkal நடைபயணம், தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை, பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது.
தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.
2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் திரு @mkstalin தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.
பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்கள், பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
K. அண்ணாமலை