
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 25 ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு பிரதமர் மோடி வரும் ஆக.6ம் தேதி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் மொத்தம் 1309 ரயில் நிலையங்களை ரயில்வே துறை மேம்படுத்த உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 508 ரயில் நிலையங்களை 24,470 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி வரும் ஆக.6ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
இது குறித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் செய்தியாளர்களிடம் பேசிய போது, தெற்கு ரயில்வேயில் 25 ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 508 ரயில் நிலையங்களுக்கு பிரதமர் மோடி வரும் 6ம் தேதி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். ரயில் நிலையங்களில் பயணியருக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தும் வகையில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தில் இடம் பெறும். லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், சிசிடிவி கேமிரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும்.
தமிழகத்தில் முதல்கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனுார், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்கள் 381 கோடி ரூபாயில் மேம்படுத்தப் படவுள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலை மேம்பாட்டு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, வரும் 2024 பிப்ரவரிக்குள் மொத்த பணிகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்… என்றார்.
இந்நிலையில், ஆக.6ம் தேதி அம்ரித் பாரத் ரயில் நிலைய சீரமைப்புக்காக தென்காசி ரயில் நிலையம் தடபுடலாக தயாராகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடுகளைப் பார்வையிட ஆக.3ம் தேதி நேற்று, மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த், ரயில்வே ஐஜி., உள்ளிட்ட அதிகாரிகள் தென்காசி ரயில் நிலையத்தில் பார்வையிட்டனர்.