
ஹாலிவுட், பாலிவுட், படத்தின் பெயர்களுடன் சிவகாசியில் விறுவிறுப்பாக விற்பனையாகும் நவீன ரக வாணவெடிகள் …..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, பிரபலமான ஹாலிவுட் படங்களின் பெயர்களுடனும், பாலிவுட் படங்களின் பெயர்களுடனும் நவீனரக வானவெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறிய ரக வாணவெடிகள் சுமார் 30 அடி உயரம் வரை பாய்ந்து சென்று வண்ண மயமாக வெடித்துச் சிதறும். பெரியளவிலான வாணவெடிகள் 200 அடி முதல், 300அடி உயரத்திற்குச் பறந்து சென்று வானில் வெடித்து வர்ணஜாலம் காட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
வாணவெடிகளில் சிங்கிள் ஷாட், டபுள் ஷாட், விசிலிங் ஷாட், கிராக்களிங் ஷாட் என நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் வெடிகள் தயாராகியுள்ளன.
சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில், புதிய வரவுகளான நவீனரக வெடிகளை பட்டாசு பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
ரயில் பயணிகள் பட்டாசு எடுத்துக்கொண்டு, ரயிலில் பயணிக்க வேண்டாம் என்று, ரயில்வே துறை எச்சரித்துள்ளது. எளிதில் தீப்பற்றும் பொருட்கள், தீப்பெட்டி, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை ரயில் பயணிகள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. அதை மீறி எடுத்துச்செல்பவர்களுக்கு, ரயில்வே போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நிறைய பேர் கிப்ட் பாக்ஸ், பட்டாசு பண்டல்களை வழக்கமாக எடுத்துச் செல்லும் பைகளில் எடுத்து செல்கின்றனர். இது விதிமுறைகளுக்கு முரணானது. அதனால், ரயில்வே போலீசார் ரயில்வே ஸ்டேஷன் நுழைவாயிலில், ஸ்கேனர் கருவியை நிறுவி லக்கேஜ்களை பரிசோதித்து வருகின்றனர். சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘இது குறித்து, எச்சரிக்கை அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதையும் மீறி கொண்டு செல்வதால், தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பரிசோதனை தொடரும்’ என்றனர்.
‘முறையான ஆய்வுக்குப் பின், தகர ஷீட் போடப்பட்ட கடைகளிலும் பட்டாசு விற்க அனுமதி அளிக்கப்படுகிறது’ என, தீயணைப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை ஒட்டி, தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைக்க, மாநிலம் முழுதும் இருந்து, 5,800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, பட்டாசு கடைகள் வைக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளோம்.
விண்ணப்பங்களை ஆய்வு செய்கிறோம். கடைகள் அமைய உள்ள இடங்களுக்கு சென்று, தீ தடுப்பு சாதனங்கள் உள்ளனவா, பட்டாசு கடைகள் வைக்க அந்த இடம் உகந்ததா என்று பார்க்கிறோம்.
பல்வேறு அம்சங்கள் குறித்து, கடை உரிமையாளர்களுடன் ஆலோசித்து, ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை சரி செய்த பின், தடையில்லா சான்று வழங்கி வருகிறோம்.
கான்கிரீட் மேற்கூரை உள்ள கட்டடத்தில் தான் பட்டாசு கடைகள் வைக்க வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளோம். பெரும்பாலான கடைகள், ‘தகர ஷீட்’ போடப்பட்ட இடங்களில் தான் உள்ளன. அந்த இடங்களையும் ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்த பின், தகர ஷீட் போடப்பட்ட கடைகளிலும், பட்டாசு விற்க அனுமதி அளித்து, தடையில்லா சான்று அளித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடி நடைபெறுவதாக சைபர் க்ரைம் காவல்துறை எச்சரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை, நவம்பா் 12-ஆம் தேதி கொண்டாடபடுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறு விறுப்பு அடைந்துள்ளது. இதற்காக தற்காலிக பட்டாசுக் கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடி நடைபெறுவதாக சைபர் க்ரைம் காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் மோசடி குறித்த புகாரினை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என சென்னை சைபர் க்ரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.