பயணிகளிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் எர்ணாகுளம் – காரைக்குடி சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
வண்டி எண் 06019/06020 எர்ணாகுளம் சந்திப்பு காரைக்குடி வாராந்திர சிறப்பு சபரி ரயில் சேவை வியாழன் தோறும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சபரிமலை செல்லும் பயணிகளின் வசதிக்காக வியாழன் தோறும் ஐந்து சேவைகள் கடந்த வாரம் முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியாகி நான்கு நாட்கள் ஆகியும் இந்த ரயிலில் பயணம் செய்ய படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் வெறும் 20 பேர்களை முன்பதிவு செய்து இருந்தார்கள். மிகக் குறைவான இந்த நபர்களுடன் இந்த ரயில் கடந்த 30 ஆம் தேதி இயக்கப்பட்டது. இதற்கு பல்வேறு ரயில் பயணிகள் நல சங்கத்தினரும் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னர் இந்த ரயில் சபரிமலை சீசனுக்காக தாம்பரம் எர்ணாகுளம் என்று இயக்கப்பட்டது கடந்த வருடம் இயக்கப்பட்ட அந்த ரயிலுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்தது ரயில் முன்பதிவு முழுவதும் முடிந்து நிறைந்த பயணிகளுடன் இயக்கப்பட்டது. எனவே இந்த வருடமும் அவ்வாறே அந்த ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் தென்னக ரயில்வே நிர்வாகம் தாம்பரம் வரை ரயிலை விடுவதற்கு பதிலாக முன்னதாக காரைக்குடியுடன் நிறுத்திக் கொண்டது. ஆனால் காரைக்குடி மானாமதுரை அருப்புக்கோட்டை இந்த ஊர்களின் வழியாக கேரளத்துக்கும் கேரளத்திலிருந்து விருதுநகர் மானாமதுரை காரைக்குடி நகர்களுக்கு செல்வதற்கும் பயணிகள் அதிகம் இல்லை.
மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை திருச்சி நகரங்களை தொடாமல் சுற்றிக்கொண்டு செல்லும் ரயிலுக்கு பயணிகள் வரவேற்பும் இல்லை. எனவே இந்த சிறப்பு ரயிலை மதுரை அல்லது திருச்சி வரை இயக்கியிருக்கலாம் அல்லது இதை வழித்தடத்தில் சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று பயணிகள் கருத்து தெரிவித்தனர்.
இருப்பினும் முதல் வாரம் பயணிகளிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் அடுத்து வரும் நான்கு வாரங்களுக்கு (07.12.2023, 14.12.2023, 21.12.2023 & 28.12.2023) இயக்கப்படுவதாக இருந்த இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த ரயிலில் ரத்து செய்வதற்கு பதிலாக தமிழகத்தின் முக்கிய நகரங்கள் எவற்றுக்கேனும் மாற்றி விட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.