அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திருஅத்யயன உத்ஸவமான வைகுந்த ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியுள்ளது. இன்று பகல்பத்து உத்ஸவத்தின் முதல் நாள்.
வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் தொடக்கம்!
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா தொடக்கமாக நேற்று திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. இன்று முதல் பகல் பத்து உத்ஸவம் தொடங்குகிறது. இதை அடுத்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரங்கனை தரிசித்து வருகின்றனர். இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் – நம்பெருமாள் பகல் பத்து திருமொழித் திருநாள் முதல் திருநாள் இன்று தொடங்கியது. இதை அடுத்து, பாண்டியன் கொண்டை, லட்சுமிபதக்கம், வைர அபயஹஸ்தம், பவள மாலை, சூரிய பதக்கம், முத்துமாலை, காதுகாப்பு உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் சிறப்பு சேவையில் இன்று நம்பெருமாள் எழுந்தருளினார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உத்ஸவங்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உத்ஸவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனிச்சிறப்பு பெற்றது. பகல் பத்து, ராப் பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்ட கம் நிகழ்ச்சியுடன் நேற்று (டிச.12) தொடங்கியது. பகல்பத்து உத்ஸவத்தின் முதல் நாளான திருமொழித் திருவிழா இன்று தொடங்கியது.
இதை முன்னிட்டு, நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப் பிரபந்த பாடல்களை அபிநயித்து, இசையுடன் பாடினார்கள்.
இரவு 7.30 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் அரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உத்ஸவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
பகல்பத்து உத்ஸவத்தின் 10வது நாள் (டிச.22) அன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
டிச.23 ஆம் தேதி ராப்பத்து உத்ஸவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் பரமபதவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலைக் கடந்து செல்வார்கள். பரமபதவாசல் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
29ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 30ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 23ஆம் தேதி முதல் ராப் பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உத்ஸவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப் பத்து ஏழாம் திருநாளான 29ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறும்.
பத்தாம் திருநாளான ஜனவரி 1ஆம் தேதி தீர்த்தவாரியும், 2ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.