போதைப் பொருள் கடத்தலில் தில்லியில் மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் சிக்கியுள்ளார். அவரைக் கைது செய்ய தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில், திமுக., மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரான அவரை கட்சியில் இருந்து திமுக., நீக்கியுள்ளது. இந்நிலையில், இத் தொடர்புகள் குறித்து பாஜக., தமிழ் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்:
நேற்று தில்லியில் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதும் தெரிய வந்தது.
சுமார் 3,500 கிலோ சூடோபெட்ரைன் வேதிப் பொருளை கடத்தியதன் மூலம் சுமார் ரூ.2000 கோடி வரை சம்பாதித்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர் தான் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும், தற்போது அவர் தலைமறைவாகியிருப்பதாகவும், அவரை பிடிக்க தீவிர முயற்சிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
அவர் யார் என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் நேற்று வெளியிடவில்லை. இன்று அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் மங்கை திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக். சென்னை திமுக மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர். இன்னொருவர் அமீர் இயக்கிய திரைப்படமான “இறைவன் மிகப்பெரியவன்” படத்தின் ஹீரோ மைதீன், அவரது நண்பர் சலீம். இந்த மூவரையும் போலீஸ் தனிப்படை அமைத்து தேடுகிறது.
விவசாயிகள் போராட்டமும் போதைப் பொருளும் தில்லியில் பேசுபொருளாகியுள்ள நிலையில், திமுக., பிரமுகருக்கும் தில்லி போதைப் பொருள் கடத்தலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து இன்று அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
கட்சியை விட்டு நீக்கிய திமுக.,
இந்நிலையில், ஜாபர் சாதிக்கை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக., அறிவித்துள்ளது. இது குறித்து திமுக., பொது செயலாளர் துரை முருகன் வெளியிட்ட அறிவிப்பில்,
சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – எனத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிய வேண்டும்!
போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிய வேண்டும் என்று, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவர், இந்தப் பணத்தை, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளதும், மேலும் போதைப் பொருள்கள் கடத்தல் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம், தமிழக அரசு நிவாரண நிதியாக வழங்கியுள்ள புகைப்படங்களும், அமைச்சர் சேகர்பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களும், மற்றொரு தேடப்படுபவரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் என்பவர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களிடம் கட்சி நிதி வழங்கியுள்ள புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும், தமிழ்த் திரைத் துறையில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இவர்கள் நெருங்கியத் தொடர்பில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், @BJP4Tamilnadu சார்பாக எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசை பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்.