சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து-தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 30, என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செவல்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது.
சென்னை உரிமம் பெற்று இயங்கி வரும் இந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் உணவு இடைவெளிக்கு பின்னர் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு ரசாயன மூலப்பொருள் சேமித்து வைக்கப்பட்ட குடோனில் ரசாயன வேதியியல் மாற்றம்
காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள மூன்று அறைகள் தரைமட்டமானது. ரசாயன பொருட்கள் வெடித்த உடனே பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஆலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்கள் சேதமடைந்தன.
3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.