தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நூறு நாட்களாக நடைபெற்ற போராட்டம், நூறாவது நாளில் அதிகளவிலான கூட்டத்தைத் திரட்டி, ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டமாக நடைபெற்றது. இதற்கு ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ ஏற்பாடு செய்தது. இந்தப் போராட்டத்தின் போது, திட்டமிடப்பட்ட வகையில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
வன்முறை, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னும் இரண்டாவது நாளாக, மருத்துவமனையில் வைத்து கலவரம் நீடித்தது. அண்ணாநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் ஓபிஎஸ், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது கலவரம், வன்முறை, துப்பாக்கி சூடு, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்து ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப் பட்டது.


