தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை என்று நடிகர் ரஜினிகாந்த குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். போலீசார் அவர்களை தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற அவர் அதன்பின் காரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார். மக்களும் தங்கள் குறைகளை ரஜினியிடம் கூறினர்.
பின்னர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிதாவது:- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனி நிகழக்கூடாது. தூத்துக்குடி வன்முறையில் ஈடுபட்டது மக்கள் கிடையாது, சமூக விரோதிகளே. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர்.
சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா விஷக்கிருமிகளை அடக்கி வைத்திருந்தார். உளவுத்துறை தோல்வியால் தூத்துக்குடியில் வன்முறை ஏற்பட்டது. எந்த பிரச்சினைக்கும் ராஜினாமா செய்வது என்பது தீர்வாகாது. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை என்றார்.


