தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை போல் தமிழ்நாடு அளவில் நடைபெறும் டிஎன்பிஎல் டி20 தொடர் கடந்த 2 ஆண்டுகளாக நடக்கிறது. உள்ளூர் விளையாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தும் நோக்கத்துடன் இந்த போட்டிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தி வருகிறது. இதில் திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜயன்ட் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 2016ல் நடந்த முதல் சீசனில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2017ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன. 3வது சீசன் ஜூலை 11ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்கும் அணிகள் கடந்த ஆண்டு தங்கள் அணியில் விளையாடிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமான அஸ்வின் உட்பட 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. டிஎன்பிஎல் தொடரில் விளையாட, மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை இந்திய அணிக்காக விளையாடும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் வரை மொத்தம் 794 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு 3லட்சம், 4 லட்சம், 5 லட்சம் என அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிசிசிஐ நடத்தும் முதல் தர போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு 1.50லட்சம், 2 லட்சம், 2.50 லட்சம் விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் வாரியம் நடத்தும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு 50 ஆயிரம், 75 ஆயிரம், 1 லட்சம் என விலை நிர்ணயம் செய்துள்ளனர்.
ஒரு அணி தக்கவைத்துள்ள வீரர்கள் உட்பட அதிகபட்சமாக 19 வீரர்களை தேர்வு செய்துக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு அணியும் ஏற்கனவே தலா 3 வீரர்களை தக்கவைத்துள்ளதால் எஞ்சிய 16 வீரர்களை ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கலாம்.
இப்படி தேர்வு செய்யும் வீரர்களில் குறைந்தபட்சம் 2 பேர் மாவட்டங்களை சேர்ந்த வீரர்களாக இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 2 பேர் 1-9-2018ம் தேதியன்று 19 வயதிற்குட்பட்டவர்களாக இருப்பதும் கட்டாயம். தேர்வு செயயப்பட்ட வீரர்களில் யாராவது காயமடையும் அல்லது பிசிசிஐ நடந்தும் உள்ளூர், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டிய சூழல் வரலாம். அப்போது ஏலம் போகாத எஞ்சிய வீரர்களில் இருந்து விரும்பும் வீரர்களை அணிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஏலம் மொத்தம் 16 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்றில் நட்சத்திர வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். அடுத்த சிலநாட்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஒப்புதலுடன் ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களின் பட்டியல், யார் கேப்டன் என்ற விவரங்களைவெளியிட உள்ளன. பெயர் மாறிய மதுரை அணி: கடந்த 2 சீசன்களில் மதுரை சூப்பர் ஜயன்ட் பெயரில் விளையாடிய மதுரை அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த சீசனில் அந்த அணியின் பெயர் மதுரை பேந்தர்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. அணியின் நிர்வாகம் கைமாறி உரிமையாளரும் மாறியதால் அணியின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.



