மாணவி ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தாம் தூத்துக்குடிக்கு வர உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டத்தால் பயன் பெற்ற மக்களிடம் நேரடியாக காணொளிக் காட்சி மூலம் உரையாடி வருகிறார் பிரதமர் மோடி. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அடல் டிங்கரிங் லேப் திட்டத்தால் பயன்பெற்ற தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலா பள்ளி மாணவிகளுடன் அவர் காணொளிக் காட்சி மூலம் தில்லியில் இருந்தபடியே உரையாடினார்.
அப்போது சூரிய ஒளி மின்சக்தி மூலம் நவீன நீர் பாசன எந்திரத்தை உருவாக்கி உள்ளது குறித்து மாணவி ஜீவிதா பெத்துலட்சுமி பிரதமரிடம் விளக்கிக் கூறினர். அப்போது, பிரதமராகிய நீங்கள் தூத்துக்குடிக்கு வரவேண்டும் என்று அந்த மாணவி வேண்டுகோள் விடுத்தார்.
மாணவியின் வேண்டுகோளை ஏற்ற பிரதமர் மோடி தாம் நிச்சயம் தூத்துக்குடிக்கு வருவதாக உறுதி அளித்தார்.


