சென்னை: நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், தமிழகத்தின் சார்பில், தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளில் தற்போதைய அவசியத் தேவையைக் கருதி, ரூ.5 கோடி நிவாரண உதவியை நேபாள அரசுக்கு தமிழக அரசு வழங்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக அங்கு பலர் உயிரிழந்ததுடன், குடியிருப்புகளும் சேதமடைந்தன. அத்துடன் அதன் அருகில் உள்ள பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களும் பாதிக்கப்பட்டன. நேபாள நாட்டில் உள்ள பல்வேறு புனிதத் தலங்களை தரிசிக்கச் சென்ற அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக திரும்புவதற்காக தமிழக அரசு ஏற்கெனவே சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. குறிப்பாக கட்டுப்பாட்டு அறை, தொலைபேசி எண்கள் மற்றும் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக அணுகும் வகையில் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் இலவச தங்கும் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

