சென்னை: வணிக வரித் துறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளில் இருந்து வணிகர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது…. தமிழகத்தில் வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்யும் போது, ஏற்கனவே செலுத்திய வரித் தொகையையும் அவற்றுக்கான தண்டத் தொகையையும் சேர்த்து கட்ட வேண்டுமென்று வணிக வரித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும், அவர்கள் பிறப்பிக்கும் ஆணைகளுக்கு எதிராக வணிகர்கள் அளிக்கும் பதிலை ஏற்க மறுப்பதாகவும் செய்திகள் வருகின்றன. வணிகர்கள் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்றால், 25 சதவிகிதத் தொகையினை முன்கூட்டியே செலுத்த வேண்டிய சங்கடமான நிலை மதிப்புக் கூட்டுவரி சட்டத்தின்படி இருந்து வருகிறது. அப்படி மேல்முறையீடு செய்யும் வணிகர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, கடைகளை மூடி, தொழிலை கைவிட்டு விட வேண்டிய அவலநிலைக்கு ஆளாகிறார்கள்.மேல்முறையீட்டு செய்யும் வணிகர்கள் 25 சதவிதத் தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டும், அதன்படி வணிகர்கள் நலன் கருதி, அரசு இதுவரை பரிவோடு பரிசீலனை செய்யவில்லை. வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தேச வரிவிதிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, கற்பனையான காரணங்களைக் காட்டி வரிவிதிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.இயற்கை நீதிக்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்படும் பாதிப்புகளையும், வணிகர்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் இன்னல்களையும், தமிழக அரசு அனுசரணையோடு ஆய்வு செய்து, வணிக வரித் துறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளிலிருந்து பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்யும் போது, ஏற்கனவே செலுத்திய வரித் தொகையையும் அவற்றுக்கான தண்டத் தொகையையும… Posted by M. K. Stalin on Monday, May 4, 2015