15 வருடம் முன் வளரவேண்டிய மொட்டாக இருந்த சின்மயி, எதை நினைத்து அச்சப்பட்டாரோ, அது வேறு ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்ததை இப்போது வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
வைரமுத்து போன்ற அரக்கர்கள், தங்கள் தங்கள் துறையில் அரசியல் மட்டத்தில் தரகு வேலை பார்த்தே செல்வாக்கை வளர்த்துக் கொண்டு, திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துவிடாமல் தாங்களே தட்டிப் பறிப்பதும், தங்களுக்கு உடன்படாவிட்டால் அந்தத் துறையில் நன்கு வளரவேண்டிய திறமைசாலிகளை ஒன்றுமில்லாமல் அழித்துவிடுவதும்தான், பலரையும் அடிபணிந்து போகச் செய்கிறது.
இதற்கு சின்மயி போன்றவர்களும் விதிவிலக்கல்ல! தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு இட்லி சாம்பார் தொடங்கி, சரக்கு முறுக்கு என வேண்டுவன எல்லாம் வாங்கிக் கொடுத்து, அடிமையாகக் கிடப்பவர்களுக்கு ஏதோ கொஞ்சம் கடைக்கண் பார்வை காட்டப்படுவதுண்டு. இல்லாது போனால், இல்லாததும் பொல்லாததும் பரப்பி ஒன்றுமே இல்லாமல் அவர்களை அடியோடு அழித்து விடுவதும் கண்கூடு. இது ஆண்களுக்கே நடக்கும் போது, பெண்களுக்கு இன்னும் அதிகமே!
சின்மயி ஏன் அன்றே வைரமுத்து பற்றி புகார் சொல்லவில்லை, அன்றே ஏன் எதிர்த்து கேட்கவில்லை என்று கேட்பவர்கள், அதே வைரமுத்துவால், அவரது இச்சைக்கு இணங்க மறுத்த பெண்ணை ஒன்றுமில்லாமல் ஆக்கிய சம்பவத்தைக் கேட்டபின்னும், அதிலும் ஆயிரம் நொள்ளை நொட்டை சொல்லத்தான் செய்வார்கள்! வைரமுத்துவின் அரக்கத்தனத்தால் ஒரு பாடகியாக வரவேண்டியவர், வேறு துறையைத் தேடிப் போய், இந்த நொள்ளாப்பே நமக்கு வேணாம் என பயந்து ஓடிப் போன சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். அதனை #மீடூவில் பேசிவரும் இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அவர் வெளியிட்ட சம்பவத்தில் சாராம்சம் இதுதான்…
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துகிட்டா லைஃப்ல அழகாக செட்டில் ஆகிவிடலாம் என வைரமுத்து ஒரு பாடகிக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாடகி புவனாசேஷன் தனது முகநூல் பக்கத்தில் மிகத் தெளிவான பதிவிட்டுள்ளார். சின்மயி 15 ஆண்டுகளுக்க முன்பு நடந்த சம்பவங்களை கூறிய நிலையில் இவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லியிருக்கிறார்.
சாரதாஸ் நிறுவனத்துக்காக ஒரு விளம்பர பாடல் ஒன்றை பாட சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த வைரமுத்து, உங்கள் குரல் இனிமையாக உள்ளது…பாடி முடித்துவிட்டு என்னை பாருங்க என்று கூறினார். இதைத் தொடர்ந்து அவரிடம் பேசிவிட்டு போன் நம்பரை பரிமாறிக் கொண்டோம்.
பின்னர் அடிக்கடி போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறினார். ஒரு கட்டத்தில், தாம் ஒரு அறிவு பூர்வமான பெண்ணை தேடிக் கொண்டிருந்ததாகவும், என் தேடல் உன்னில் முடிந்து விடுமோ என்று நினைக்கிறேன் எனவும் கூறி, காதல் வலை வீசினார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.
மறு நாள் என்னை அழைத்து, உன் கண்கள் என்ன கூர்வாளா… என் கவிதையே துண்டு துண்டாகி உன் காலடியில் விழுந்து கிடக்கிறதே என மீண்டும் வலை வீசினார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன்.
சிறிது காலம் கழித்து, மலேசியாவில் விருது வழங்கும் விழா ஒன்று நடக்க உள்ளது. அதற்கு வருகிறாயா? என்று கேட்டார். அதற்கு நான் பாடவா? அல்லது தொகுத்து வழங்கவா? என்று கேட்டேன். இரண்டுக்கும் இல்லை என்றார் வைரமுத்து.
பின் ஏன் நான் வரவேண்டும் என்று நினைத்தேன்! அவரது எண்ணத்தை நான் புரிந்து கொண்டு, மறுத்துவிட்டேன். அதன் பிறகு பல முறை என்னை தொடர்பு கொண்டு மலேசியா வருகிறாயா? நாளையே கடைசி. உன் பதிலைச் சொல். டிக்கெட் போட வேண்டும் என்றெல்லாம் கூறி தொந்தரவு செய்தார். ஆனால் நான் உறுதியாக மறுத்து விட்டேன்…
ஒரு கட்டத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துகிட்டா லைஃப்ல அழகா செட்டில் ஆகிவிடலாம் என வைரமுத்து ஆசை வார்த்தை காட்டினார். அவர் சொன்ன அட்ஜஸ்ட் என்ன என்பது எனக்குப் புரிந்தது. ஆனால் நான் உறுதியாக இருந்ததால், என்னை மிரட்டத் தொடங்கினார். உனக்கு இனிமேல் எந்த வாய்ப்பும் இலலாமல் செய்வேன்… என் செல்வாக்கு தெரியுமா? என மிரட்டினார்.
அவர் சொன்னதுபோலவே எனக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் செய்து காட்டினார்… நல்ல குரல் வளம் இருந்தும் எனக்கு பாட வந்த வாய்ப்புகளை எல்லாம் கிடைக்கவிடாமல் செய்தார். இதனால் நொந்து போன நான் ஒவ்வொரு நாளும் அழுதேன். பின் வேறு வேலைக்குச் சென்று விட்டேன். என் பின்னணிப் பாடகி கனவை முற்றிலுமாக தகர்த்தவர் வைரமுத்து! – என்று கூறியிருக்கிறார்.
அப்படி வைரமுத்துவை அன்றே காறித் துப்பியிருந்தால்… வைரமுத்து குறித்து அன்றே சொல்லியிருந்தால்… ஏ.ஆர்.ரஹானா கூறியது போல் அன்றே வெளிப்படையாகப் பேசியிருந்தால்… அப்படி தன் திருமணத்துக்கு அழைக்காமல் போயிருந்தால்… சின்மயி என்ற பாடகி மொட்டிலேயே கருகிப் போயிருப்பார் என்பதுதான் புவனா சேஷன் போன்ற பெண்களின் வாழ்க்கை உணர்த்தும் ரகசியம்!
இன்னும் எத்தனை எத்தனை அரக்கர்கள் இப்படி ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார்கள்?! வளரவேண்டிய செடிகளுக்கு அமிலத்தை ஊற்றி கருக்கி விடுகிறார்கள்!? இதற்கெல்லாம் ஒரு #மீடூ இயக்கம் போதாது!




