சென்னை:
நீதிபோதனை வகுப்புகளை வரும் கல்வியாண்டில் இருந்தாவது துவக்கவேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
பள்ளி, கல்லூரிகளில் நல்லொழுக்கம் குறைந்து வருவது, பலவிதமான குற்றங்கள் மலிந்து வருவது சமூக அக்கறையுள்ளோரை பெரிதும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
சமீபத்தில் கூடிய ஜேக்டோ எனும் ஆசிரியர் கூட்டமைப்பு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்திட தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. இதனை இந்து முன்னணி முழு மனதோடு வரவேற்கிறது.
தற்காலத்தில் பள்ளிகளில் படிப்பும் வளரவில்லை, பண்பும் வளரவில்லை என்ற நிலை இருக்கிறது. பண்பு வளர்வதற்கு, தன்னம்பிக்கை வளர்ப்பதற்கு எந்த ஏற்பாடும் பள்ளிகளில் இல்லை. இதனால் மாணவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மாணவர்கள் தவறானப் பாதையில் செல்லவோ இன்று பல காரணிகள் உள்ளன. அதில் ஒன்று கணிணி, கைபேசி முதாலனவை முதலிடம் பிடிக்கின்றன. திரைப்படங்களும் மாணவப் பருவத்தில் தவறான பாதையில் செல்ல தூண்டுகிறது.
இத்தனை சோதனைகளுக்குப் பிறகும் ஒரு மாணவன் தன்னார்வத்தால் மட்டுமே நல்லவனாக, நல்ல குடிமகனாக வளர முடிந்தால் அதுவே ஒரு சாதனை என்று சொல்லலாம். மாணவர்களிடையே நற்சிந்தனை உருவாக்க எந்த முயற்சி எடுக்காத அரசு இலவச பொருட்கள் கொடுத்து ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது.
குடித்துவிட்டு வரும் ஆசிரியர்கள், பாலியல் தொந்தரவு தரும் ஆசிரியர்கள், மாணவர்கள் படிக்காமல் காப்பி அடித்து பாஸ் செய்ய வைக்கும் பள்ளி நிர்வாகம், அதற்குத் துணைபோகும் அதிகாரிகள், மதிப்பெண் பெறாவிட்டாலும் தேர்ச்சி விகிதத்தை கூட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தால் பாஸ் போடும் அதிகாரிகள், இதனையெல்லாம் சாதனையாகக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் என்று பண்பாட்டுச் சீர்கேடு கொடி கட்டிப் பறக்கிறது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் ஆசிரியர்கள் ஸ்டிரைக் செய்ததற்கு அவர் பத்திரிகையாளர்களிடம் வேதனையோடு குறிப்பிட்டார், இவர்களிடம் படிப்பு இருக்கிறது, மாணவர்களுக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற பண்பு இல்லையே என்று கூறினார்.
இந்நிலை மாற வேண்டும். மதிப்பெண் பெறுவதில் காட்டும் ஆர்வத்தோடு, நல்ல மாணவனாக உயர வேண்டும் என்ற கனவையும் விதைக்க வேண்டும். படிப்பில் தோல்வி அடைவதால் அவன் வாழ்வு சீரழிந்துவிடாது. பிறகு எந்த வயதிலும் திறமையை வளர்த்துக்கொண்டு ஒருவன் உயர்வை அடையலாம், அப்படி அவன் உயர்வை பெறும்போது அதனை சமூகம் அங்கிகரிக்க நல்ல பண்புடன் அவன் வாழ்வு அமைய வேண்டும் என்பது மிக முக்கியம்.
எனவே, மாணவர்கள் வளரும் பருவத்திலேயே நல்ல நம்பிக்கைகளை வளர்த்து, பண்புள்ளவனாக, அன்பு உள்ளம் கொண்டவனாக உயர கல்வித்துறை வழிகாட்ட வேண்டும். பாடத்திலும், பண்பிலும் தேர்ச்சி பெற்றால்தான் வாழ்வில் நிலையான உச்சத்தை அடைய முடியும் என்பதை பதிய வைக்கும் வகையில் நீதிபோதனை வகுப்புகள் நடத்திட வேண்டும்.
இதற்கு சேவபாரதி உள்ளிட்ட சமூக அமைப்புகளின் உதவியை கல்வித்துறை நாடலாம். இதன் மூலம் நல்ல பண்பாடுள்ள வருங்கால சமூகத்தை, தன்னம்பிக்கை உள்ள தலைமுறையை உருவாக்க முடியும்.
எனவே வரும் கல்வி ஆண்டில் நீதிபோதனை வகுப்புகளை நடத்திட இப்போதே திட்டமிட தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.