சென்னை: திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப் படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
திமுக., முன்னாள் தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதி, அவரது மறைவை அடுத்து காலியானதாக அறிவிக்கப் பட்டது. தொடர்ந்து, திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜன.28 ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள திருவாரூரில் நிவாரணப் பணிகள் சரிவர முழுமையடையாத நிலையில், அங்கே இடைத்தேர்தல் நடத்துவது சரியல்ல என்றும், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் திமுக., பாஜக., அதிமுக., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,அதிமுக., திமுக., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
நேற்று தமிழக பாஜக., அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக., தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலும், இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிகை எழுப்பப் பட்டது.
இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத் தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் இது கூறப்பட்டுள்ளது.