பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா அரசின் கனவு திட்டமான, 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் கோவை, சென்னை உட்பட, 20 நகரங்களின் முதல் பட்டியலை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மும்பை தனியார் துறையின் அதிகமான பங்களிப்புடன் கனவு உருவாக உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டமான 100 ஸ்மார்ட் நகரங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி நிதி தேவைப்படும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதில் ரூ.80 லட்சம் கோடி தனியார் பங்களிப்பாக இருக்கும் என் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி சர்வதேச ஆய்வு நிறுவனமான டெலோய்ட்டியின் இந்தியக் கிளை மூத்த இயக்குனர் சுதர்சன் கூறியதாவது:
ஸ்மார்ட் நகரங்களுக்கு நிதி ஏற்பாடு செய்ய வேண்டியது முக்கியமானது என்றாலும், இத்திட்டத்தின் மேலாண்மை, அதன் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் கவனம் செலுத்துவது, ஒழுங்குமுறை நிர்வாகம் போன்றவையும் பெரும் சவாலாக விளங்கும்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 20 ஸ்மார்ட் நகரங்களில், முதல் கட்டமாக, வை-பை வசதி ஏற்படுத்த ரிலையன்ஸ், பார்தி, வோடாபோன் போன்ற நிறுவனங்கள் இந்தாண்டில் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளன. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் பேஸ்புக் இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது.
நாட்டிலுள்ள 400 ரயில் நிலையங்களில் வை-பை வசதி கிடைக்க கூகுள் நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. அதுபோல், சேவை அளிக்கும் நிறுவனங்களும் அதிகமான முதலீடு செய்ய உள்ளது. இவைதான் ஸ்மார்ட் நகரங்களின் முதுகெலும்பாக அமையும். இதற்காக, சேவை துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் துறைகளுடன் தொடர் ஆலோசனைகளில் ஈடுபடும். ஆக மொத்தம், பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமான 100 ஸ்மார்ட் நகரங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி நிதி தேவைப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் ஸ்மார்ட் நகரங்கள் உருவானதும், அவை நாட்டின் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பொருளாதார, சமூக மையங்களாக விளங்கும்.
இவ்வாறு சுதர்சன் கூறினார்.நாட்டிலுள்ள 500 நகரங்களை தரம் உயர்த்தும் ‘அம்ரூத்’ எனப்படும் அடல் ஊரக மறுசீரமைப்பு புத்தாக்கம் திட்டம் மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் திட்டங்களுக்காக தொடக்க நிதியாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்று சுதர்சன் தெரிவித்துள்ளார்
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள, 20 நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை திரட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


