சென்னை:
அண்ணா நினைவு நாளில் 319 கோயிகளில் பொதுவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுதெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா நினைவுநாளையொட்டி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 3-ந் தேதி (இன்று) 319 திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெறுகிறது. இதில் சபாநாயகர், அமைச்சர்கள், மக்கள்பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கிறார்கள்.
திருவொற்றியூரில் உள்ள தியாகராஜசுவாமி கோவிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் சபாநாயகர் ப.தனபால் கலந்து கொள்கிறார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பார்த்தசாரதி சுவாமி கோவிலில் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் காமராஜ், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
சென்னையில் 32 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற உள்ளது. மாநிலத்தின் பிற இடங்களில் அண்ணா நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெறும் கோவில்களில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


