புது தில்லி:
பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெருக்கு பாகிஸ்தான் செல்வதற்கான நுழைவு இசைவை (விசா) அளிக்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வரும் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்குமாறு இந்தியாவிலிருந்து அனுபம் கெர், நடிகை நந்திதா தாஸ், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உள்பட 18 பேருக்கு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.அதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்குச் செல்வதற்கான நுழைவு இசைவை பெற 18 பேரும் விண்ணப்பித்திருந்ததாகவும், அனுபம் கெர் தவிர மற்ற அனைவருக்கும் நுழைவு இசைவு அனுமதியை பாகிஸ்தான் குடிவரவுத் துறை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பத்ம பூஷண் விருது பெற்ற அனுபம் கெர், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பாகிஸ்தான் மக்களிடையே நிலவும் இந்தியா மீதான தவறான புரிதல்களை நீக்க இந்த இலக்கிய நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் விசா தர மறுக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. பாகிஸ்தான் கலைஞர்கள் இங்கு வர இந்தியா எப்போதும் அனுமதி அளித்து வருகிறது.
இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அவர்களின் நிகழ்ச்சி நடத்த மறுப்பு எழுந்தாலும்கூட மற்ற பகுதிகளில் நிகழ்ச்சியை அவர்கள் நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து தந்திருக்கிறது (பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலி நிகழ்ச்சி நடத்த மறுப்பு எழுந்ததை மறைமுகமாகக் குறிப்பிட்டார்).
நான் ஒரு காஷ்மீர் பண்டிட் என்பதால்கூட விசா மறுக்கப்பட்டிருக்கலாம். இதற்காக வருத்தம் அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டனர் என்றார் அனுபம் கெர்.
இதனிடையே, இதுகுறித்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக செய்திதுறைத் தலைவர் மன்சூர் மேமன் கூறுகையில், “நுழைவு இசைவு பெறுவதற்கான விண்ணப்பத்தை அனுபம் கெர் சமர்ப்பிக்கவில்லை. விண்ணப்பித்த தற்கான ஆதாரம் அவரிடம் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், கராச்சி இலக்கியத் திருவிழா (கேஎல்எஃப்) செய்தித்தொடர்பாளர் அமீனா சையது கூறுகையில், “அனுபம் கெர்க்கான விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டாம் என்று தெரிவிக்குமாறு தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் எங்களிடம் கேட்டுக் கொண்டது’ என்றார்.


