புது தில்லி:
ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறுவதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டதை தவிர்த்து, கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டமும் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், “பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களைக் குறைக்கக் கூடாது. பல்வேறு அமைச்சகங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்’ என்றார்.
ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ் கூறுகையில், “சட்டப் பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களை குறைக்கக் கூடாது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது’ என்றார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியபோது, கடந்த இரு நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களைப் போல அல்லாமல், பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். ஏழைகளின் வாழ்க்கையில் முன்னேற்றமும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கித் தர வேண்டும் என்று அரசு விரும்புகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நம்புகிறோம். எவ்வித இடையூறும் இன்றி, பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு சார்பில் பேச்சு நடத்தப்படுகிறது என்றார்.
காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, தீபேந்தர் ஹூடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சரத் யாதவ், கே.சி.தியாகி, சமாஜவாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.


