புது தில்லி:
மத்திய ரயில்வே பட்ஜெட் பிப்.25-ஆம் தேதியும், மத்திய பட்ஜெட் பிப்.29-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்குகிறது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,
இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.23-ஆம் தேதி தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி மார்ச் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ரயில்வே பட்ஜெட் பிப்.25-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கை பிப்.26-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். பிப்.29-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலாகும். பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை நடைபெறும்.
5 மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களைக் குறைப்பது குறித்து ஒரு பரிந்துரை இருந்தது. ஆனால், மத்திய அரசும், அனத்துக் கட்சிகளும் பட்ஜெட் கூட்டத் தொடரை முழுமையாக நடத்த கூட்டாக முடிவு செய்தன.
2011-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சில மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைக்கு மசோதாக்களை அனுப்புவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இப்போது பட்ஜெட் கூட்டதொடரின் இரு பகுதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது என்றார்.


