மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக உளவு பார்ப்பதற்காக இந்தியாவிற்கு எட்டு முறை வந்து சென்றதாக வீடியோ கான்பரன்சிங் மூலம் அமெரிக்காவில் இருந்தபடியே மும்பை நீதிமன்றத்தில் தீவிரவாதி டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளார். இதில், 7 முறை அவர் நேரடியாக பாகிஸ்தானில் இருந்து நேரடியாக இந்தியா வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலின் சதிகாரனான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், மும்பை தீவிரவாத தாக்குதலில் அப்ருவராக மாற ஒப்புக்கொண்ட ஹெட்லியிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் லஸ்கர்-இ- தொய்பாவின் உண்மையான சீடராக தான் இருந்ததாக டேவிட் ஹெட்லி கூறியுள்ளார்.
தமது பெயரை மாற்றிக்கொண்டு போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும், மும்பை தாக்குதல் சதிதிட்டம் நடத்த 8 முறை இந்தியா வந்ததாகவும் டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒரு அலுவலகம் அமைக்க தம்மை லஸ்கர் இ தொய்பா வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை நகரத்தின் வீடியோ தொகுப்பை தம்மிடம் கேட்டதாகவும் டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளார். மும்பை தாக்குதலுக்கு பிறகு 2009ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி தாம் மீண்டும் இந்தியா வந்ததாகவும் டேவிட் ஹெட்லி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


