உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து குஜராத்திலும் பெண்கள் மொபைலில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் ரூ.2100 அபராதம் கட்ட வேண்டும் என கிராம ஜாதி பஞ்சாயத்து அடாவடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாரில் சில தினங்களுக்கு முன்பு கூடிய காப் என்னும் ஜாதி பஞ்சாயத்து கும்பல், தங்களது கிராமத்தில் 18 வயதுக்கு குறைவான பெண்கள் செல்போன் பேச தடை விதித்தது. மீறும் பெண்களுக்கு தெருக்களை சுத்தம் செய்யும் தண்டனை வழங்கப்படும் என்றும் அடாவடியாக அறிவித்தது. ஆனால் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக துணை கலெக்டர் தெரிவித்திருந்தார்.
தற்போது உத்தரபிரதேசத்தை தொடர்ந்து முதல்வர் ஆனந்தி பென் படேல் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெறும் குஜராத்தில் உள்ள சூரஜ் என்னும் கிராமத்தில் பள்ளி மாணவிகள் செல்போன் பேச தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த கிராமத்தின் தலைவர் தேவ்ஷி வன்கர் கூறுகையில், மொபைல் போனால் பள்ளி மாணவிகளின் படிப்பு கெடுகிறது. மேலும் அவர்கள் காதல் வலையில் விழுந்து சீரழிந்து போகின்றனர். எனவே இதை தடுக்கும் வகையில் பெற்றொர்களின் கோரிக்கையை ஏற்று இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு ரூ.2100 அபராதம் விதிகக்ப்படும். இந்த கட்டுப்பாடு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு மட்டும்தான் என்றார். உத்தரபிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


