தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 60 சதவீத தொகைக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2016-17ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் போது, 40 சதவீத தொகைக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும் எனவும், மீதமுள்ள 60 சதவீத தொகைக்கு வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதாவின் பி.எம்.எஸ். தொழிற்சங்கம் உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உடனடியாக இந்த வரிவிதிப்பு முறையை கைவிட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தொழிலாளர் எடுக்கும் வைப்பு நிதியின் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


