சென்னை: போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கான 12–வது ஊதிய ஒப்பந்தம் 1–9–2013 முதலே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. அரசு பேச்சுவார்த்தைக்குக் கூட அழைக்காமல் காலம் தாழ்த்தியதால் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உட்பட 11 போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் டிசம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அதன் பிறகு தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவே முன் வந்தார். கூடுதல் நிதித் துறைச் செயலாளர், உமாநாத், ஐ.ஏ.எஸ்., தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அரசு அமைத்தது. இந்தக் குழுவினரும், பேச்சு வார்த்தை நடத்தாமல், கோரிக்கை மனுக்களை மட்டும் வாங்கிக் கொண்டனர். அதன் பிறகு மீண்டும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பினைக் கொடுத்தன. அதன் பிறகு, குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடந்தது. 42 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிலே பங்கேற்றார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றாலும், முக்கிய பிரச்சினைகளில் உடன்பாடு வராததால், மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடருவதென்றும், வேலை நிறுத்தத்தை நடத்துவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டு, தொழிற்சங்கத்தினர் வெளியே வந்தார்கள். அப்போது கூட ஆளுங்கட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினரும், அவர்கள் அழைத்து வந்த குண்டர்களும் சேர்ந்து மற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் மீது கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டார்கள். நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் சுமூக முடிவு காணப்பட வில்லை. அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் எந்தக் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்தனர். அதனால் பிரச்சினை இழுபறியாகவே நீடித்தது. இந்தநிலையில் தான் 10–4–2015 அன்று ஐந்தாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலே அந்தத் துறையின் அமைச்சரும் கலந்து கொண்ட போதிலும், அதிலும் முடியாமல், கோரிக்கையை ஏற்க தமிழக அரசிடம் நிதியில்லை என்று அமைச்சர் அரசின் மோசமான நிதி நிலைக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்து, மீண்டும் 13ஆம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாகக் குறைத்ததோடு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் 25 ஆயிரம் பேரைக் குறைத்தார்கள். போக்குவரத்துக் கழகங்கள் என்றாலே அ.தி.மு.க. அரசுக்கு என்ன காரணத்தாலோ எழும் வெறுப்புணர்வு காரணமாக, பேருந்துகளையும், தொழிலாளர்களையும் குறைத்த காரணத்தால், போக்குவரத்துக் கழகங்களில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் போனஸ், ஒப்பந்தம் பறிப்பு, சலுகை உரிமை பறிப்பு மூலம் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் இருபதாயிரம் ரூபாய் வரை பறித்து பழி வாங்கிய ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி. போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த விவகாரத்தில் இதுவரை ஐந்து முறை பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன என்பதையும், 2013ஆம் ஆண்டிலேயே முடிந்திருக்க வேண்டிய பிரச்சினை இரண்டாண்டு காலமாக நீடித்துக் கொண்டு போவதையும் மனதிலே கொண்டு, 13ஆம் தேதியன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமானதொரு முடிவினைக் காண வேண்டும். தமிழக அரசிடம் நிதியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அ.தி.மு.க. அரசு எப்போது நிர்வாகப் பொறுப்புக்கு வந்ததோ, அப்போதே இந்த ஆட்சியில் அந்த நிலைமை தான் வரும் என்பது பொது மக்களுக்குத் தெரியாதா என்ன? எனவே அதையே சொல்லிக் கொண்டிராமல், பேச்சுவார்த்தையையும் நீடித்துக் கொண்டே போகாமல் தொழிலாளர்களின் மனம் குளிர்ந்தால் தான் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக நடைபெறும் என்பதை மனதிலே கொண்டு தமிழக அரசு 13ஆம் தேதிய பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவினை அறிவிக்க முன்வர வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: கருணாநிதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari