சென்னை : மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 71 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தயபிரதா சாஹூ நேற்று தெரிவித்தார்.
17வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில், 2ம் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், வேலுார் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா காரணமாக, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஒரு சட்டசபை தொகுதிக்கும் என நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்குப் பதிவு நிலவரம் குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ கூறியபோது…
தமிழகம் முழுவதும் நடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை மற்றும் சில இடங்களை தவிர்த்து இரவு 9 மணி நிலவரப்படி சராசரியாக 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சம் நாமக்கல் தொகுதியில் 78 சதவீதமும், குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. சட்டமன்ற 18 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 71.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது,.
மக்களவைத் தொகுதிகள் வாரியாக பதிவான வாக்கு சதவீதம்:
திருவள்ளூர் 72.02
வட சென்னை 61.76
தென் சென்னை 57.43
மத்திய சென்னை 57.86
ஸ்ரீபெரும்புதூர் 60.61
காஞ்சிபுரம் 71..94
அரக்கோணம் 75.45
கிருஷ்ணகிரி 73.89
தர்மபுரி 75.92
திருவண்ணாமலை 71.27
ஆரணி 76.44
விழுப்புரம் 74.96
கள்ளக்குறிச்சி 76.36
சேலம் 74.94
நாமக்கல் 79.75
ஈரோடு 71.15
திருப்பூர் 64.56
நீலகிரி 70.79
கோவை 63.67
பொள்ளாச்சி 69.98
திண்டுக்கல் 71.13
கரூர் 78.96
திருச்சி 71.89
பெரம்பலூர் 76.55
கடலூர் 74.42
சிதம்பரம் 78.43
மயிலாடுதுறை 71.13
நாகை 77.28
தஞ்சாவூர் 70.68
சிவகங்கை 71.55
மதுரை 62.01
தேனி 75.28
விருதுநகர் 70.27
ராமநாதபுரம் 68.26
தூத்துக்குடி 69.41
தென்காசி 71.60
திருநெல்வேலி 68.09
கன்னியாகுமரி 69.62
புதுச்சேரி 81.2
18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம்
18 தொகுதி இடை தேர்தல்
பூந்தமல்லி 79.14
பெரம்பலூர் 61.6
திருப்போரூர் 81.05
சோளிங்கர் 79.63
குடியாத்தம் 81.79
ஆம்பூர் 76.35
ஓசூர் 71.29
பாப்பிரெட்டிபட்டி 83.31
அரூர் 86.96
நிலக்கோட்டை 85.50
திருவாரூர் 77.38
தஞ்சாவூர் 66.10
மானாமதுரை 76.03
ஆண்டிபட்டி 75.19
பெரியகுளம் 64.89
சாத்தூர் 60..87
பரமக்குடி 71.69
விளாத்திகுளம் 78.06
மொத்தம் 71.62 – என்று கூறினார் சத்யப்ரதா சாஹூ.
தமிழக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது என தேர்தல் பொறுப்பு டிஜிபி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது… தமிழகத்தில் நடந்து முடிந்த 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடை தேர்தல் எந்த வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் பணியில் 160 கம்பெனி படைகள் மற்றும் 1.40 லட்சம் பேர், 67,720 வாக்குச் சாவடிகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். மேலும் திருவண்ணாமலை மற்றும் மதுரை சித்திரை திருவிழாவிற்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று கூறினார்.
இதனிடையே, கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட வீரவநல்லுார் ஓட்டுச்சாவடியில் பா.ஜ.க.,வினர் அ.ம.மு.க வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜ.க.,வினர் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், அரியலூரிலும் ஆம்பூரிலும் திமுக., அதிமுக., அமமுக, பாமக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்கு சதவீதம் கடந்த 2014 தேர்தலைப் போல் இந்த முறையும் அதிகரித்தே காணப்பட்டது. கடந்த தேர்தலை விட ஓரிரு சதவீதம் குறைந்திருப்பினும், 70 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவானதால், இது யாருக்கு சாதகமாக அமையும் என்று தெரியாமல் கட்சிகள் குழம்பிப் போயுள்ளன.
தமிழகத்தை பொறுத்த வரையில், பலமான கூட்டணியை இரு திராவிடக் கட்சிகள் தரப்பும் அமைத்தன. தவிர, அமமுக., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என மூன்று தரப்பினர், மோடி எதிர்ப்பு, பாஜக., எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்தனர். மக்கள் நீதி மய்யம் ஒரு புறம் ஆளும் அதிமுக., மற்றும் திமுக., பாஜக., ஓட்டுகளையும் இளைஞர்கள் வாக்குகளையும் பிரித்தது. அதே நேரம், திமுக.,வுக்கு வரவேண்டிய இஸ்லாமிய வாக்குகளை எஸ்டிபிஐ கட்சியின் கூட்டணி மூலம், அமமுக., பிரித்தது. அதிமுக.,வுக்கு வரவேண்டிய தேவர் சமுதாயத்தின் ஒரு பிரிவு ஓட்டுகளை அமமுக பிரித்தது.
இந்த நிலையில், கடந்த தேர்தலைப் போல் மோடி அலை தமிழகத்தில் இல்லை. கடந்த தேர்தலிலும், மோடி அலையால் தமிழகத்துக்கு பெரிய அளவில் வாக்குகள் சேரவில்லை என்றாலும், இந்தத் தேர்தலிலும் அத்தகைய நிலையே நீடித்தது. திமுக.,வுக்கு இந்த முறை இந்து எதிர்ப்பு கருத்துகளால் பெரும் சிக்கல் ஏற்பட்டது. எனவே திமுக.,வும் திக் திக் என்ற நிலையிலேயே உள்ளது.
மேலும், தேர்தல் அதிகாரிகளின் ஏற்பாடுகளால், வாக்காளர்கள் யாருக்கு வாக்காளித்தனர் என்பதை வாக்குச்சாவடி முகவர்கள் அறிந்து கொள்ள இயலாமல் போனது. இதனால் அவர்களாலும் கணிக்க முடியவில்லை.