ஆந்திரா என்கவுண்டர்: போலீஸ் விசாரணையில் நீதிமன்றம் அதிருப்தி

Published:

ஹைதராபாத்: ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ஆந்திர போலீஸாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி சிவில் உரிமைக் கழகமும், கொல்லப்பட்ட சசிகுமாரின் மனைவி முனியம்மாள் ஆகியோரும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது விசாரணை தொடர்பான போலீசாரின் டைரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 10 நாட்களுக்கு முன்பு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட பின்னரும், போலீஸாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாதது அதிருப்தி அளிக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் மீது ஏற்கெனவே போலி என்கவுண்டர் புகார்கள் பல இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்னும் 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதில் போலீஸ் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும், சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. அடுத்த விசாரணை மே 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

Related articles

Recent articles

spot_img