பொன்பரப்பி வன்முறை: சாத்தான்கள் வேதம் ஓதினால் மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்! என்று தலைப்பிட்டு பாமக., தலைவர் ஜிகே. மணி இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில்,
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், போலி மத போதகர் எஸ்ரா சற்குணம் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் மருத்துவர் அய்யா அறிக்கை வெளியிட்டதாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அய்யாவுக்கு அறிவுரைகளையும் இலவசமாக அவர் வழங்கியிருக்கிறார்.
ஸ்டாலினின் அறிக்கையை படித்து முடித்த பிறகு மனிதர்களை கொன்று உண்ணும் புலி, பசுத்தோலை போர்த்திக் கொண்டு ‘‘புத்தம் சரணம் கச்சாமி… தம்மம் சரணம் கச்சாமி’’ போதித்த உணர்வு தான் ஏற்பட்டது. பொன்பரப்பி நிகழ்வுகள் குறித்தோ, சமூக நல்லிணக்கம் குறித்தோ பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
பொன்பரப்பியில் வன்முறையைத் தூண்டியவர்களை போற்றிப் பாதுகாப்பதுடன், வன்னிய மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இல்லாத ஆதாரங்களையும், சாட்சிகளையும் போலியாக உருவாக்கி வருவது திமுக தான். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே மோதல் தொடர வேண்டும்; அதில் தாங்கள் குளிர் காய வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் கொள்கையும், கோட்பாடும் ஆகும்.
பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவதைப் போல, பொன்பரப்பியில் வன்முறையை தூண்டி விட்டவர்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டு, அமைதி குறித்து பேசுவதன் மூலம் தாம் ஒரு நல்ல நாடக நடிகர் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார். மொத்தத்தில் ஸ்டாலினின் அறிக்கை என்பது சாத்தான் ஓதிய வேதம். அதை மக்கள் நம்பமாட்டார்கள்.
மருத்துவர் அய்யா கடந்த 27-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் இருக்கிறது. தேவைப்பட்டால் அதன் நகலை ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கிறேன். அதை துரைமுருகன் போன்ற விவரமறிந்தவர்களின் உதவியுடன் மு.க.ஸ்டாலின் படிக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு வார்த்தை வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தால் கூட ஸ்டாலின் சொல்லுக்கு கட்டுப்படுகிறேன். அவ்வாறு இல்லை என்றால் பாமக., நிறுவனர் மருத்துவர் அய்யாவிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்புக் கேட்பாரா?
அதுமட்டுமின்றி, வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் எஸ்ரா சற்குணமும், முத்தரசனும் பேசிய பேச்சுக்களையும் துரைமுருகன் போன்றவர்களின் துணையுடன் ஸ்டாலின் கேட்க வேண்டும்.
‘‘நீங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் தான். நீங்கள் ஒன்றும் பிராமணர்கள் அல்ல. நீங்கள் ஒன்றும் உயர்குலத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால், உங்களுக்கு நீங்களே சத்திரியர் என்ற பட்டத்தைப் போட்டுக் கொள்கிறீர்கள். நீங்கள் எந்த விதத்தில் சத்திரியர்களாக முடியும்? வன்னியர்களாகிய நீங்கள் மரம்வெட்டிகளாக இருந்து, மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளி, பாறாங்கற்களையெல்லாம் உருட்டி வைத்து மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தினீர்கள்’’ என எஸ்ரா சற்குணம் பேசியுள்ளார்.
இடஒதுக்கீடு கோரி வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சிறிய மனிதர் சற்குணம் கொச்சைப்படுத்துவதை மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்துகிறாரா? ‘‘நானும் ஒரு விடுதலைச் சிறுத்தை. இந்தக் கிழட்டு சிறுத்தை சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது’’ என்று அவர் மிரட்டியது தான் சமூக நல்லிணக்கத்தை போற்றும் செயலா?
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும் போது வன்னியர்களை மரம்வெட்டிகள் என்று கொச்சைப்படுத்தினார். அது சரியான செயலா? அதுமட்டுமின்றி, ‘‘நக்சலைட்டுகளை எதற்காக சுட்டுக்கொல்ல வேண்டும் என்று சொல்கிறோம்…. நக்சலைட்டுகளை எதற்காக தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். அதைப் போலத் தான் இவர்களையும் செய்ய வேண்டும்’’ என்றும் கொக்கரித்தார்.
இயேசுவின் போதனைகளை பரப்புவதாகக் கூறும் மத போதகரும், பொதுவுடைமை பேச வேண்டிய இயக்கத்தின் தலைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விஷம் கக்குவதும், வன்மம் பாராட்டுவதும் சரியா? அவர்களின் இந்த செயலை ஸ்டாலின் ஆதரிக்கிறாரா, கண்டிக்கிறாரா? நேரடி பதில் தேவை. இதுகுறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? அவர் தயார் என்றால் விவாதத்திற்காக இடத்தையும், நேரத்தையும் அறிவிக்கட்டும்.
கூட்டணியில் உள்ளவர்கள் ஒரு தவறு செய்தால் அதை ஆதரிப்பது அல்ல கூட்டணி தர்மம்; தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது தான் கூட்டணி தர்மம். அதை கூட்டணியின் தலைவரான மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். பொன்பரப்பி வன்முறை… பொன்பரப்பி வன்முறை என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறும் ஸ்டாலின், பொன்பரப்பியில் ஊனமுற்ற அப்பாவி ஒருவரைத் தாக்கியும், இன்னொருவரை பாட்டிலால் குத்தியும், வன்னிய சமுதாய பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியும் கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்பதை மனசாட்சியைத் தொட்டு சொல்வாரா?
திமுக அனைத்து சமுதாய மக்களின் கட்சி என்றால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களுக்கு ஆறுதலையும், வன்முறை செய்த விசிக கும்பலுக்கு கண்டனத்தையும் தெரிவித்திருக்க வேண்டும் தானே? அதை ஏன் ஸ்டாலின் இதுவரை செய்ய வில்லை.
மாறாக அரியலூர் மாவட்ட திமுக செயலாளரை காவல் நிலையத்துக்கு அனுப்பி, வன்னியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது ஏன்? இதில் இருந்தே வன்னிய மக்களுக்கு மு.க.ஸ்டாலினுக்கு எந்த வகையான உறவு என்பதை அறிந்து கொள்ளலாம்.
வாக்கு அரசியலுக்காக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கும்பல் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதும், நாகரிகத்தையும், நெறிகளையும் மறந்து கைத்தட்டலைப் பெற வேண்டும் என்பதற்காக நான்காம் தர பேச்சாளர்களைப் போல வக்கிரத்தையும், வன்மத்தையும் கலந்து பேசுபவர்களை சமூக நல்லிணக்கவாதிகள் என்று வக்காலத்து வாங்குவதும் திமுகவின் தலைவராகவும், திமுக கூட்டணியின் தலைவராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அழகல்ல.
ஸ்டாலின் அறிக்கை எனக்கு எந்த வகையிலும் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. ஏனெனில் இப்போது எஸ்ரா சற்குணமும், முத்தரசனும் பேசிய பேச்சுக்களை ஒரு காலத்தில் பேசிய கட்சி தான் திமுக.
தருமபுரி நிகழ்வுகளின் போது, பிரச்சினைக்கு காரணம் யார்? என்பது பற்றி ஆராயாமல், ஆதிக்க சாதியான வன்னியர்கள் தான் அனைத்துக்கும் காரணம் என்று திமுக அவதூறு பரப்பியதை மறக்க முடியுமா?
உண்மை கண்டறியும் குழுவை தருமபுரிக்கு அனுப்பி வன்னியர்களை வன்முறையாளர்களாக சித்தரித்ததை மன்னிக்க முடியுமா? வன்மமும், வன்மமும், வஞ்சகமும், வஞ்சகமும் சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற அணி என்ற பெயரில் வன்னியர்களுக்கு எதிரான வன்மக் கூட்டணியாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமூகமான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதுதான் இன்றைய அவசரத் தேவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமூகங்களிடையே மோதலை மூட்டும் திமுக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டால் தான் அது நடக்கும்; விரைவில் இது சாத்தியமாகும்… – என்று கூறியிருக்கிறார்.




