கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தேர்தல் பிரசாரத்தின் போது இந்து தீவிரவாதி என்ற பேச்சு தொடர்பாக கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருந்தது. இதில் கைதாகாமல் தவிர்க்க, வழக்குப் பதிவை தொடர்ந்து முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார், கமல்!
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலுக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தனது உத்தரவில், 5 நாட்களுக்குள் அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கமல் முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியது.
மேலும், ரூ.10 ஆயிரம் மற்றும் 2 நபர் உத்தரவாதத்தில் கமலுக்கு முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து; அவன் பெயர் கோட்சே என்று இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் சென்று பேசியதை அடுத்து கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.
கமல் மீது, மத உணர்வுகளை புண்படுத்துதல், மத மோதல்களை தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து, கமல் தரப்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப் பட்டது. அதனை முன்னதாக ஒத்தி வைத்திருந்த நீதிமன்றம், இன்று காலை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.