வாக்காளர்களை ஏற்றி அழைத்து வந்தது தொடர்பாக 5 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றின் உரிமையாளர்கள் 3 பேர் மீது கிராம நிர்வாக அலுவலர் புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, வடமாநிலங்களில் பணியாற்றும் பள்ளபட்டியை சேர்ந்த முஸ்லிம் வாக்காளர்கள் சென்னையிலிருந்து பள்ளபட்டிக்கு 5 ஆம்னி பேருந்துகளில் நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சோதனை நடத்தி பேருந்துகளில் வந்தவர்கள் பள்ளபட்டியை சேர்ந்த வாக்காளர்களா என உறுதிப்படுத்திக் கொண்டு விடுவித்தனர்.
தொடர்ந்து, 5 ஆம்னி பேருந்துகளையும் பறிமுதல் செய்து அரவக்குறிச்சி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக, வேலம்பாடி கிராம நிர்வாக அலுவலர் கவிதா, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அப்சல், சுரேஷ்காந்தி, பார்த்தசாரதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்காக பள்ளபட்டி வாக்காளர்களை அழைத்து வருவதற்காக அரசியல் கட்சியினர் யாரும் இப் பேருந்துகளை முன்பதிவு செய்தார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



