
மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடைய தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன
ஆன்லைன் சூதாட்டமான ரம்மி மூலம் ஏற்பட்ட இழப்பு காரணமாக மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியன் (41). ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவருக்கும், மதுரையைச் சேர்ந்த பட்டு மீனாட்சி (33) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை நிறைவு செய்த வேங்கட சுப்ரமணியன் டேட்டா அனலைஸிஸ் எனும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்துள்ளார்.
பல்வேறு அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் தரவுப் பகுப்பாய்வு பணிகளைச் செய்து வந்ததுடன், தன்னுடைய துறை சார்ந்த ஆய்வில் பல மாணவ மாணவியரையும் அவர் வழிநடத்தி வந்தார்.
பட்டு மீனாட்சி, வேங்கட சுப்பிரமணியன்
ஆய்வு மாணவியாக வேங்கட சுப்பிரமணியனிடம் சேர்ந்தபோது இவருக்கும் மீனாட்சிக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
நாகமலை என்.ஜி.ஜி.ஓ காலனியின் வசித்து வந்த இவர்களின் வீடு கடந்த சில நாட்களாக ஆள் அரவமின்றிக் காணப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுதொடர்பாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் நாகமலை காவல்துறைக்கு, தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்து வீட்டை ஆய்வு செய்த காவலர்கள், கதவைத் திறந்து மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கே வேங்கட சுப்பிரமணியனும், பட்டு மீனாட்சியும் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இறந்து 5 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தம்பதிகள் மரணம் தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தம்பதிகள் இருவரும் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல், வாழ்ந்து வந்தனர். திடீரென இவ்வாறு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
கம்ப்யூட்டர், ஆன்லைன் தொடர்பான வேலைகளை கணவனும் மனைவியும் சேர்ந்தே செய்து வந்தனர்.
மிக ஆடம்பரமாக வாழ்ந்த இவர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக பணத்தை இழந்துவிட்டார்கள். ஆகையால் அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்திருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறினர்.
மேலும் இவர்களுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை பிறக்கவில்லை. அதன் காரணமாகவும் மனம் நொந்து இந்த முடிவை மேற்கொண்டிருக்கக்கூடும் எனவும் அக்கம் பக்கத்து வீட்டார் போலீஸார் விசாரணையில் தெரிவித்துள்ளனா்.
நாகமலை தம்பதிகள் மரணம் தொடர்பாக அவர்கள் வசித்து வந்த வீட்டில் கிடைத்த ஆவணங்களைக் கைப்பற்றிய போலீஸார், இந்த மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தம்பதிகளுடன் ஆன்லைனில் ரம்மி விளையாண்டது யார்? உடன் விளையாடியவர்கள் யாருக்கேனும் இந்த தற்கொலையில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
தம்பதிகளின் தற்கொலை நாகமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


