பிரதமர் மோடியைப் பாராட்டிய கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அப்துல்லா குட்டியை காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று முன்தினம் நீக்கி விட்டார்கள்..!
இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைப் பாராட்டிய வசந்தகுமார் எம்பி., காங்கிரசில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் கடந்த மாதம் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்த அவர்கள், கடந்த 18 – ஆம் தேதி கடலில் ஏற்பட்ட சீற்றத்தில் சிக்கி உள்ளனர். அதில் அவர்களின் படகு எஞ்சின் பழுது அடைந்ததை தொடர்ந்து, நடுக்கடலில் தத்தளித்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் இவர்களை மீட்பதற்காக தனியார் மீட்பு குழுவினர் வந்தனர். எதிர்பாராதவிதமாக அந்த மீட்புக் குழுவின் படகும் பழுதானதால், மீட்பு படகில் வந்தவர்களும் சேர்ந்து கடலில் தத்தளித்தனர்
பின்னர் இதுபற்றி இந்திய கப்பற்படை மற்றும் கடலோர படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 20 மீனவர்களையும் மீட்டனர்.
இதுதொடரப்பாக கன்னியாகுமரி தொகுதி எம்பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான வசந்தகுமார், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: – நான் ஒரு காங்கிரஸ்காரர். ஒரு மத்திய அமைச்சர் தோற்கடிக்கப்பட காரணமாக இருந்தவர். அப்படிப்பட்ட நான், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலில் தத்தளிப்பது கேள்விப்பட்டு 10.38 மணிக்கு பாரத பிரதமர் அலுவலகத்திற்கு மெயில் அனுப்பினேன். எங்களின் மீனவ சமுதாய மக்கள் கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை உடனே காப்பாற்ற வேண்டும் என்று பாரத பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பினேன்.
அதை பார்த்து அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். இதிலிருந்து என்ன புரிந்து கொள்வது என்றால், பாராளுமன்ற உறுப்பினர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும்சரி, மத்தியில் உள்ள பாஜக அரசு, பாரபட்சம் பார்க்காமல் மக்களை காப்பாற்ற வேண்டியது கடமையை அவர்கள் செய்கிறார்கள்.,… என்று கூறினார்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாநில மக்களுக்காகவும், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இப்போதும் அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறது. அதைத்தான் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உறுதிப்படுத்தி உள்ளார்.
பிரதமர் மோடியால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்று கூப்பாடு போடுகின்ற, திமுக கூட்டணியில் அங்கம் வகித்து அதன் மூலம் வெற்றி பெற்றவர் வசந்தகுமார். அவர், பிரதமர் நரேந்திர மோடி அரசை பாராட்டி உள்ளது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற விழாவிற்கு அவரை அழைக்கவில்லை என்று ஏற்கனவே கோபத்தில் இருந்த ஸ்டாலினுக்கு, இது எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடியை பாராட்டிய கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அப்துல்லா குட்டியை காங்கிரஸை விட்டு நீக்கினார்கள். அந்த வரிசையில் தமிக காங்கிரஸ் துணைத் தலைவர் வசந்தகுமார் எம்பி, எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்கிறார்கள்.
ஏற்கெனவே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்தி டிவிட்டர் பதிவிட்டு, இப்போது டிவிட்டர் கணக்கில் இருந்தே வெளியேறிவிட்டார் காங்கிரஸின் ஐடி., விங் தலைவராக இருந்த குத்து ரம்யா எனப் படும் திவ்யா ஸ்பந்தனா. இப்போது வசந்தகுமாரும் பாராட்டியிருப்பதால், எழும் சிக்கல்களைத் தவிர்க்க மோடி அரசை ஏதாவது வசைபாடப் போகிறாரா அல்லது காங்கிரஸில் இருந்து ஒதுக்கப்படப் போகிறாரா என்பது இனிமேல்தான் தெரியும்!