அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை. அதிமுக., சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “கட்சியும் ஆட்சியும் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது! அமைச்சர்களும் முழுமனதுடன் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றனர்…. என்று கூறினார்.
மேலும், அதிமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை என்றும், மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின் கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை கட்சி எடுத்து வருகிறது என்று கூறினார்.
முன்னதாக, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கூறிய கருத்து சரியானதே என குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் அவருக்கு ஆதரவு தெரிவித்தது பெரும் புயலைக் கிளப்பியது.
தனது மகனுக்காக ஓபிஎஸ் பதவி கேட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை ஏற்படுத்தியது என்றும், அதிமுகவில் குழப்பத்தை, உட்கட்சி பூசலை ஏற்படுத்துவதற்காக இதனைப் பேசவில்லை; எனது வருத்தத்தை பதிவு செய்கிறேன் என்றும் கூறினார் குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன்.
மேலும், முதல்வருடன் துணை முதல்வரும் ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார்கள் என்று கூறிய ராமச்சந்திரன், ஒற்றைத் தலைமை பற்றி பொதுக்குழுவில் எடுத்துரைப்போம். திமுக, காங்கிரஸ் தவறுகளை அதிமுக தலைமை மக்களிடம் எடுத்துச் சொல்லத் தவறிவிட்டது என்று கூறினார்.