தண்ணீர் இன்றி கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள சென்னை நகர மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறது வானிலை!
வரும் 18ஆம் தேதி (செவ்வாய்) முதல் ஒரு வார காலத்திற்கு சென்னை நகரில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்பது தான் அந்த மகிழ்ச்சியான செய்தி. இதன் மூலம் நீர்நிலைகளில் நீர் சேரவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறப் படுகிறது.
சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படலாம் என்று கூறப் பட்டது.
குடிநீர் மற்றும் கழிவறைகளுக்கு தேவையான நீர் கிடைக்காததால் பள்ளிகள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாயின. இது அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதால் பள்ளி நிர்வாகிகள் தரப்பிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனராம்.
தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் பலவும் தண்ணீருக்காக பெரும் செலவு செய்வதால், தங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று புகார்களைத் தெரிவித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்தே பணி செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும், வீடுகளிலும் தேவையான தண்ணீருக்கு சிரமப் படுவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை நகரில் மட்டுமல்லாது, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பருவ மழை அல்லது புயல் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த வாரம் சென்னைக்கு மழை வாய்ப்பு இருப்பதாகக் கூறப் படுவது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்திதான்!