திருப்பாவை -9: தூமணி மாடத்து (பாடலும் விளக்கமும்)

Published:

thirupavai pasuram 9 - 2026
andal-vaibhavam-1

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் 9

விளக்கவுரை: வேதா.டி.ஸ்ரீதரன்

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்! (9)

பொருள்

ஒளிவீசும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகையில், தீபங்கள் எரிய, நறுமணம் கமழ, மென்மையான படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே, எழுந்திரு. மணிகள் பதிக்கப்பட்ட கதவைத் திறப்பாயாக. மாமி! நாங்கள் எத்தனையோ தடவை சப்தமாக அழைத்தும் உங்கள் மகள் எழுந்திருக்கவில்லை. நீங்களாவது அவளை எழுப்பக் கூடாதா? உங்கள் மகள் ஊமையா, செவிடா? காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் இல்லாதவளா? அல்லது, எழுந்திருக்கக் கூடாது என்று யாராவது காவல் போட்டிருக்கிறார்களா? அல்லது, ஏதேனும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு உறங்குகிறாளா? மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று பகவானின் பல்வேறு திருநாமங்களைச் சொல்லி நாம் பாவை நோன்பை மேற்கொள்ளலாம். தோழியே, நீயும் எழுந்து வந்து எங்களோடு சேர்ந்துகொள்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

அருஞ்சொற்பொருள்

தூ – தூய்மையான

தூமணி – ரத்தினங்களால் இழைக்கப்பட்ட

தூமணி மாடம் – செல்வச் செழிப்பு மிக்க மாளிகை

துயில் அணை – படுக்கை

கண்வளரும் – உறங்கும்

மாமான் – மாமன், மாமா

மணிக்கதவம் – மணிகள் நிரம்பிய கதவு

மாமீர் – மாமியே

அனந்தல் – உறக்கம்

ஏமம் – காவல்

ஏமப்பெருந்துயில் – எழுந்திருக்க முடியாதபடி பெரும் தூக்கத்தால் கட்டுண்டவள்

மந்திரப்படுதல் – மந்திரத்தால் கட்டுப்பட்டு இருப்பது

நவில்தல் – சொல்லுதல்

மாமா, மாமி முதலியவை மூத்தவர்களைக் குறிக்கும் சொற்கள்.

800563 andal - 2026
aandal 2

மொழி அழகு

ஆண்டாளும் தோழிகளும் நடுக்கும் குளிரில் நீராடப் போவதற்காகத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இந்தப் பெண்ணோ சுகமாகத் தூங்குகிறாள். அவளது படுக்கை அறையைப் பற்றிய வர்ணனை மூலம் ஆண்டாள் அவளை வஞ்சப் புகழ்ச்சியில் (புகழ்வது போலப் பழிப்பது) கிண்டல் பண்ணுகிறாள்.

ஆன்மிகம், தத்துவம்

ஊமை, செவிடு, உறக்கத்தின் வசப்பட்டவள் என்பவை நமது உறுப்புக்களின் பயன்களை விளக்குவதற்காகச் சொல்லப்பட்டவை. இறைநாமங்களைப் பேசாத வாயும், கேட்காத செவியும் இருந்து என்ன பயன்? இறைசிந்தனையில் மூழ்காத மனம் அஞ்ஞான உறக்கத்தில் இருப்பதாகத்தானே பொருள்?

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

அனந்தல் என்பது தாமச குணத்தைக் குறிக்கிறது. தமோ குணத்தில் மூழ்கி இருக்கும் நாமும் நல்லோர் சேர்க்கையைக் கைக்கொண்டால், அவர்கள் நமக்காக மெனக்கெட்டு நம்மை நல்ல வழியில் ஈடுபடுத்துவார்கள்.

Related articles

Recent articles

spot_img