வடுமாங்காய்
தேவையானவை:
பச்சை பசேல் என்று காம்புடன் கூடிய சிறு நெல்லிக்காய் சைஸ் – வடுமாங்காய்கள் (வாயில் போட்டால் கடுக்கென்று இருப்பவை) – சிறு படி கணக்கில் 10 படி, உப்பு – அரை படி (தலை வடித்தது), காய்ந்த மிளகாய் 100 கிராம், கடுகு – 100 கிராம், மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன், விளக்கெண் ணெய், நல்லெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
மாவடுக்களை காம்பு ஒடித்து, குழாய் தண்ணீரில் நன்றாக கழுவி வடிதட்டியில் கொட்டி, நீர் வடிந்ததும் சுத்தமான டவல்களில் போட்டு இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி, பின் துடைத்துக் கொள்ளவும். ஒரு அகல பேஸின் (அ) தாம்பளத்தில் வடுக்களைப் போட்டு விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் விட்டு பிசிறிக் கொள்ளவும். வடுமாங்காயின் அளவில் பத்துக்கு அரை பங்கு அளவு உப்பு எடுத்து வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பின்பு ஜாடியில் சிறிது உப்பு, 2 கைப்பிடி மாங்காய், சிறிது மஞ்சள்தூள் என்று மாற்றி மாற்றி சேர்த்து, மூடியால் மூடி, வாய்கட்டு போட்டு (வெள்ளைத் துணியால் வெளிப்புறம் கட்டி வைப்பது), ஒரு நாள் வைத்து மறுநாள் ஜாடியை குலுக்கிக் கொள்ளவும். இப்படி ஒரு வாரம் வைத்து எடுத்தால் மாங்காய்கள் நன்றாக சுருங்கி நீர் விட்டிருக்கும். அதன் பிறகு காம்பு நீக்கிய மிளகாய், கடுகை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் ரவை போல் பொடிக்கவும். இதை மாவடுவில் கொட்டி சுத்தமான கரண்டியால் கிளறி மூடி போட்டு, வாய்கட்டு போட்டு, தினமும் குலுக்கவும். மேற்கொண்டு பத்து நாட்களில் நல்ல வாசனை வரும். பிறகு எடுத்துப் பரிமாறலாம் (மாவடுக்களில் நீர் குறைவாக இருந்தால் 2 கப் கொதி நீரை ஆற்றி சேர்க்கலாம்).