திருப்புகழ் கதைகள்: சமணர்கள் கழுவேற்றப் பட்டார்களா?!

Published:

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 200
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

குறித்தமணி – பழநி
சமணர்கள் கழுவேற்றப் பட்டார்களா?

இன்னொன்றும் சொல்லவேண்டும். அப்பர் சம்பந்தர் போன்ற நாயன்மார்கள் பக்திமார்க்கத்தை மக்களிடம் பரப்புவதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அதே சமயத்தில் சமணர்களோடு கொள்கைகளைப் பற்றி வாதுபுரிவதற்குத் துணை செய்யும் சைவசித்தாந்த ஆகமங்கள் வடமொழியில் தயாராகிக்கொண்டிருந்தன.

இதற்காகவே பிராமணர்களில் சைவப்பிராமணர்கள் என்ற ஒரு குழு உருவாகிக்கொண்டிருந்தது என்று ரிச்சர்ட் டேவிஸ் கூறுகிறார். கைலாசநாதர் கோயிலில் இருக்கும் ராஜசிம்ம பல்லவனைப் பற்றிய கல்வெட்டு ஒன்று அவன் சைவசித்தாந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தான் என்று கூறுகிறது. எனவே எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சைவசித்தாந்தம் உறுதி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கூறியவற்றில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. சமணர்களுக்கும் சைவர்களுக்கும் சண்டை இருந்திருக்கலாம். ஆனால் சம்பந்தர் தேவாரத்திலோ அல்லது அப்பர் தேவாரத்திலோ அல்லது கிடைத்திருக்கும் கணக்கற்ற கல்வெட்டுகளிலேயோ சம்பந்தர் சமணர்களை வென்று கழுவேற்றியதாக எந்த அகச்சான்றும் இல்லை. முன்னால் சொன்னது போல ஜைன இலக்கியத்திலோ ஜைனக் கல்வெட்டுகளிலோ சான்றுகள் இல்லை.

samanar kazhuvetram - 2026

களப்பிரர்காலத்தில் அரசர்களுக்கு அதிக வருவாய் நிலத்திலிருந்து இல்லை. வருவாய் வணிகர்களிடமிருந்து வந்துகொண்டிருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் வணிகர்களின் செல்வச் செழிப்பைக் கூறுகிறது என்பது நமக்குத் தெரியும். வணிகர்கள் சமணமதத்தைச் சார்ந்து இருந்ததால், சமணர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. வணிகர்கள் சண்டையை விரும்பாதவர்கள். மக்கள் சமரசமாக இருந்தால்தான் வாணிபம் செழிக்கும். எனவேதான் சிலப்பதிகாரம் சமரசத்தை வலியுறுத்துகிறது.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

இந்த நிலைமை பல்லவர் காலத்தில் மாறத் துவங்கியது. மக்கள்தொகை பெருகியதால் காடுகள் அழிக்கப்பட்டு விவசாயம் பெருமளவில் தொடங்கியது. பல பிராமணர்களுக்கு நிலம் அளிக்கப்பட்டு பிரம்மதேயங்கள் உருவாகின. பிராமணர் அல்லாத பெரும் நிலக்கிழார்கள் உருவாயினர். கோயில்கள் கட்டப்படத் துவங்கின. கோயில்களுக்கு பிராமணர்கள் தேவையாக இருந்தார்கள்.

கோயில் நிலங்களைப் பராமரிக்க பிராமணரல்லாத நிலக்கிழார்கள் தேவையாக இருந்தார்கள். வணிகர்களின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. அரசர்களைச் சமண வழியிலிருந்து திசை திருப்ப ஒரு கூட்டணி உருவாகியது. இது பிராமண – வெள்ளாளக் கூட்டணி என்று பர் டன்ஸ்டெயின் கூறுகிறார். அப்பர் வெள்ளாளர், சம்பந்தர் பிராமணர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்தக் கூட்டணி அகிம்சையைப் போதிக்கவில்லை. ஆனால் வன்முறையில் ஈடுபட வேண்டிய தேவையும் இல்லை.

சமண மதம் என்றுமே பொதுமக்கள் மத்தியில் ‘அதிக அளவில் செல்வாக்கு பெற்ற மதமாக இருந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு. அப்பரும் சம்பந்தரும் பொது மக்களிடம் சைவ மதத்தைக் கொண்டு சென்றாலும், அரசர் அரசியர் ஆதரவு தேவையாக இருந்தது. அந்த ஆதரவு கிடைத்துவிட்டது… என்பதைத் தேவாரப் பாடல்கள் தெளிவாக்குகின்றன. மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை’ சைவத்தை ஆதரித்ததால் பாண்டியநாட்டு மன்னன் நெடுமாறன் ஆதரவும் தந்தையான சோழமன்னன் ஆதரவும் சைவத்திற்குக் கிடைத்து விட்டது. வடதமிழ்நாட்டில் மகேந்திரவர்மன் சைவனாக மாறிவிட்டான். சமணர்களை அழித்தொழிக்க அவசியமும் இல்லை.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா
samanar kazhuvetram1 - 2026

சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டிருந்தால் அவர்களைப் பற்றிய செய்தியே தமிழ் வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டிற்கு பின் வந்திருக்காது. மாறாக Encyclopaedia of Oriental Philosophy என்ற நூல் ஏழாம் நூற்றாண்டை விட எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் சமண மக்கள் தொகை தமிழகத்தில் அதிகமாக இருந்தது என்கிறது.

லெஸ்லி ஓர் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரை சமண மதத்தைச் சார்ந்த 341 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார். அவற்றில் 203 கல்வெட்டுகள் எட்டாம் நூற்றாண்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இவற்றில் 50 கல்வெட்டுகள் மதுரையைச் சுற்றி இருக்கின்றன. இந்தக் காலத்தில் சமணர்கள் வசதியோடு வாழ்ந்தார்கள் என்பதனை சமணப் பெண்கள் செய்த கொடைகளைப் பற்றிய கல்வெட்டுகள் நமக்குத் தெரிவிக்கின்றன என ஓர் கூறுகிறார்.

மேலும் ராஜசிம்மன் காலத்தில்தான் ஜினகாஞ்சி என அன்று அழைக்கப்பட்ட திருப்பருத்திக் குன்றத்தில் ஒரு பெரிய சமணக் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் துவாரபாலகர்கள் இந்துக் கடவுள்கள் என்கிறார் ரிச்சர்ட்டேவிஸ். திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணியின் காலம் பத்தாம் நூற்றாண்டு. அழித்தொழிக்கப்பட்ட சமூகத்திலிருந்து அத்தகைய காவியம் பிறந்திருக்க வாய்ப்பு இல்லை. புகழ்பெற்ற இலக்கண நூலான யாப்பருங்கலக்காரிகை பதினொன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

எனவே அப்பர், சம்பந்தர் காலத்திற்குப் பின்பும் சமணர்கள் தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டிருந்தனர் என்பது தெளிவு.

சமணர்கொலை நடந்திருக்கலாம் என்று யூகம் செய்வதற்குச் சுற்றி வளைத்து ஓர் ஆதாரம் இருக்கிறது என்று பால்டுண்டாஸ் கூறியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அவரே இது குழப்பத்திற்குத்தான் இட்டுச் செல்லும் (it may do no more than confuse the question) என்கிறார். படுகொலை நடந்ததாகக் குறிப்பிடப்படும் இடத்தில் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குக் கல்வெட்டுகள் ஏதும் இல்லை என்கிறார் (கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை).

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

ஆனால் இந்தச் சான்றை வைத்துக்கொண்டு கழுவேற்றம் நடந்தது என்று கூறி விட முடியாது. ஏனென்றால் சமணர்கள் அச்சுறுத்தல் ஏதுமின்றி இயங்கிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் காலத்திலும் – அதே இடத்தில் சமணர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் இயங்கத் தொடங்கினர் என்பதை மறந்து விடமுடியாது. அவர்கள் வலுவோடு இயங்கியதாகக் கூறப்படும் ஐந்து, ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளிலும் எந்தக் கல்வெட்டுகளும் கிடைக்கவில்லை. சமணர்கள் அந்த இடத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கலாம். அல்லது அவர்களாகவே வெளியேறி இருக்கலாம்.

எனவே சமணர் கழுவேற்றம் என்பது நடந்த வரலாறு என எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

Related articles

Recent articles

spot_img